/* */

கிலோவுக்கு ரூ.20 குறைந்த நூல் விலை; திருப்பூரில் பனியன் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு

நடப்பு மாதம் ஜனவரிக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்துள்ளதால், திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

கிலோவுக்கு ரூ.20 குறைந்த நூல் விலை;  திருப்பூரில் பனியன் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு
X

நூல் விலை, கிலோவுக்கு ரூ. 20 குறைந்தது. (கோப்பு படம்)

திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வந்தது. எனவே, நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதத்திற்கான நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என நூற்பாலைகள் அறிவித்தன. இதற்கிடையே நடப்பு மாதத்திற்கான (ஜனவரி) நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தன. இதில் கிலோவுக்கு நூல் விலை ரூ.20 குறைந்தது.

அதன்படி ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.253-க்கும், 24-ம் நம்பர் ரூ.265-க்கும், 30-ம் நம்பர் ரூ.275-க்கும், 34-ம் நம்பர் ரூ.295-க்கும், 40-ம் நம்பர் ரூ.315-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.245-க்கும், 24-ம் நம்பர் ரூ. 255-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ. 285-க்கும், 40-ம் நம்பர் ரூ.305-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு மாதத்துக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்ததால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு

திருப்பூரை பொருத்தவரை, மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது பனியன் உற்பத்தி மட்டுமே. அதை சார்ந்த மற்ற தொழில்களும் நடக்கின்றன. பனியன் உற்பத்தி மந்தமடைந்துள்ளதால், கடந்த 10 மாதங்களுக்கு மேலாக, திருப்பூரில் பணப்புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற தொழிலாளர்களில் பெரும்பாலானோர், இன்னும் திருப்பூருக்கு திரும்பி வரவில்லை. ஏனெனில், பனியன் நிறுவனங்களில் உற்பத்தி இல்லாததால், தொழிலாளர்களை மீண்டும் வரவழைக்க இயலாத நிலையில், பனியன் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

ஏற்கனவே, பல்வேறு தொழில் நெருக்கடிகளால், பனியன் உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பஞ்சு மற்றும் நூல் விலை ஏற்றங்கள், கடுமையான பாதிப்பை, தந்து வருகிறது. இந்நிலையில், நூல் விலை இந்தமுறை கிலோவுக்கு 20 ரூபாய் வரை குறைந்திருப்பது, பனியன் உற்பத்தியாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இதன்பிறகு, ஆர்டர்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.,

தற்போது, பொங்கல் பண்டிகை காலமாக இருப்பதால், விடுமுறை நாட்களுக்கு பிறகு பனியன் உற்பத்தி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் தொழில் துறையினரிடையே ஏற்பட்டுள்ளது.

Updated On: 2 Jan 2023 8:25 AM GMT

Related News