மாயமான நீர்மூழ்கியை தேடும் பணியில் பெரும் பின்னடைவு
சப்தம் வந்த இடத்தில் டைட்டன் நீர்மூழ்கி இல்லை என்றும், உண்மையிலேயே அந்த சப்தம் நீர்மூழ்கியிலிருந்து வந்ததாக இல்லாமல் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.
HIGHLIGHTS
டைட்டானிக் கப்பலைப் பார்க்கச் சென்று ஆழ்கடலில் மாயமான நீர்மூழ்கியை தேடும் பணியில், பெரும் பின்னடைவாக, சப்தம் வந்த இடத்தில் டைட்டன் நீர்மூழ்கி இல்லை என்றும், உண்மையிலேயே அந்த சப்தம் நீர்மூழ்கியிலிருந்து வந்ததாக இல்லாமல் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.
புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள இடத்தைப் பார்வையிடுவதற்காகச் சென்று ஆழ்கடலில் மாயமான டைட்டன் நீா்மூழ்கியில் ஆக்ஸிஜன் அளவு வேகமாகக் குறைந்து வருவதால், அதிலுள்ள 5 பேரை உயிருடன் மீட்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
95 மணி நேரத்துக்கு போதுமான ஆக்ஸிஜன் இருக்கும் நிலையில், நீர்மூழ்கி மாயமாகி கிட்டத்தட்ட 80 மணி நேரத்தை நெருங்கவிருப்பதால், நீர்மூழ்கிக்குள் இருக்கும் ஆக்ஸிஜன் தீர்ந்துபோகும் அபாய கட்டத்தில் இருப்பதும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
நீா்மூழ்கி மாயமான ஆழ்கடல் பகுதியிலிருந்து சப்தம் வந்தது கண்டறியப்பட்டதையடுத்து, அது நீா்மூழ்கிக்குள் இருப்பவா்கள் எழுப்பிய ஓசையாக இருக்கலாம் என்று கருதப்பட்டதால் அவா்கள் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை எழுந்தது.
அதையடுத்து அந்த சப்தம் எழுந்த பகுதியை நோக்கி தேடுதல் பணிகளின் கவனம் அதிகரிக்கப்பட்டது. எனினும், அந்த சப்தம் டைட்டன் நீா்மூழ்கியிலிருந்து வந்தததாக உறுதியாகக் கூற முடியாது என்று தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடலோர காவல் படைப் பிரிவு தளபதி ஜான் மாகா் தெரிவித்தார்
மேலும், மிகவும் ஆழமான கடலுக்குள் மாயமாகியுள்ள டைட்டன் நீா்மூழ்கியைத் தேடுவது, தொடா்ந்து சிக்கலான மற்றும் மிகக் கடுமையான பணியாக உள்ளது என்றும் கூறினார் எனினும், ஆழ்கடலில் நிபுணத்துவம் பெற்ற பிற அமைப்புகளின் ஆலோசனைகளுடன் கடலுக்குள் மூழ்கியவா்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதாக அவா் தெரிவித்தார்.
பிரிட்டனிலிருந்து அமெரிக்கா நோக்கி கடந்த 1912-ஆம் ஆண்டு சென்று கொண்டிருந்த டைட்டானிக் கப்பல், வழியில் பனிப்பாறை மோதி கடலுக்குள் மூழ்கியதில் 1,500-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.
கடலுக்குள் மூழ்கிய அந்தக் கப்பல், அமெரிக்காவின் நியூஃபௌண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவில் கடலடியில் உடைந்து கிடந்தது கடந்த 1985-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.
அதன் பிறகு, அந்தக் கப்பலை கடல் ஆய்வாளா்கள், விஞ்ஞானிகள், திரைப்படத் துறையினா் போன்றவா்கள் ஆழ்கடலுக்குள் சென்று பார்வையிட்டு வந்தனா்.
இந்த நிலையில், டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதற்காக ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் என்ற அமெரிக்க தனியார் நிறுவனம் நீா்மூழ்கி ஒன்றை வடிமைத்தது.
‘டைட்டன் நீா்மூழ்கி’ என்று பெயரிடப்பட்ட அதில் அதிகபட்சமாக 5 போ் வரை பயணிக்க முடியும். எனினும், அந்த நீா்மூழ்கியின் பாதுகாப்புத் தன்மை குறித்து போதிய அளவுக்கு சோதிக்கப்படவில்லை என்று நிபுணா்கள் குற்றம் சாட்டி வந்தனா்.
இந்த நிலையில், எம்வி போலார் பிரின்ஸ் என்ற கப்பல் மூலம் டைட்டானிக் கப்பல் விழுந்துள்ள கடல் பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை எடுத்துவரப்பட்ட டைட்டன் நீா்மூழ்கி, வியாழக்கிழமை காலை கடலுக்குள் இறக்கப்பட்டது.
அதில் பிரிட்டன் தொழிலதிபா் ஹமீஷ் ஹார்டிங், ஓஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனா் ஸ்டாக்டன் ரஷ், நீா்முழ்கி மாலுமியும் பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் கமாண்டோவுமான பால்-ஹென்றி நார்கியோலே, பாகிஸ்தான் தொழிலதிபா் ஷேஸாதா தாவுத், அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகிய 5 போ் இருந்தனா்.
சுமாா் 4 கி.மீ. ஆழத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த நீா்மூழ்கிக்கும் போலாா் பிரின்ஸ் கப்பலுக்கும் இடையே இருந்த தகவல் தொடா்பு சுமாா் 1 மணி நேரம் 45 நிமிடத்துக்குப் பிறகு துண்டிக்கப்பட்டது.
அதையடுத்து, அமெரிக்க கடலோரக் காவல் படை கப்பல்கள், கனடா விமானப் படை விமானம் உள்ளிட்டவற்றின் உதவியுடன் தீவிர தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.