துருக்கி, சிரியாவை புரட்டி போட்ட நிலநடுக்கம்: 1700க்கும் மேற்பட்டோர் பலி
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 1700க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வந்துள்ளது.
HIGHLIGHTS

துருக்கியில் நில நடுக்கம் ஏற்பட்டதால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதிகாலை என்பதால் வீடுகளில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து அதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். இந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க துருக்கி - சிரியாவின் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 1700க்கும் மேற்பட்டவர்கள் பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உள்ளனர்.துருக்கியில் குறைந்தது 912 பேர், சிரியாவின் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் குறைந்தது 350 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர் அவர்களை மீட்கவும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
துருக்கி நாட்டின் அதானா,மலாத்யா ஆகிய நகரங்களில் நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. மீட்புப்பணிகளில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் மற்றும் மீட்புப்படையினர் ஈடுபட்டுனர். இந்நிலையில் மீட்புப்பணி நடைபெற்று கொண்டிருக்கும் போதே 4 மணியளவில் மீண்டும் 7.6 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தினால் துருக்கி, சிரியா மக்கள் மீள முடியாமல் தவித்து வருகிறார்கள்.
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகின் பல நாடுகளும் ஆதரவும் நீட்டுவதாக அறிவித்து உள்ளன. துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற நாய் படைகளுடன் 100 பேர் கொண்ட NDRF குழுக்கள் விமானம் மூலம் அனுப்பப்படும் என பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் தெரிவித்துள்ளது. நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவ NDRF மற்றும் மருத்துவக் குழுக்களை அனுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் நில நடுக்கம் ஏற்படுவது இது புதிதல்ல. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் நடந்த பூகம்பத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாகவும் பழைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.