/* */

அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?

விலங்கு மனித மோதலின் காரணமாகவே அரிசிக்கொம்பன் யானை மூர்க்கமடைந்துள் ளதாகக் கூறப்படுகிறது.

HIGHLIGHTS

அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
X

பைல் படம்

அரிசி கொம்பன் யானையை முன் வைத்து கேரளாவில் பல அரசியல் நடந்தது. மனம்போன போக்கில் சித்து விளையாட்டை விளையாடி தீர்த்தார்கள் ரிசார்ட் மாபியாக்கள்.

தற்போது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் உச்சியில் சுதந்திரமாக உலா வந்து, இலை தழை உணவுகளுக்கு மாறி இருக்கும் அரிசி கொம்பன் மாறியுள்ளது. இந்த சாந்தமான யானை இவ்வளவு மூர்க்கமாக மாற என்ன காரணம் என்பதை பார்க்கலாம். இப்படியாக அரிசி கொம்பன் எனும் மூர்க்கனை உருவாக்கியதற்கு வன மாபியாக்கள் தான் காரணமாக இருந்துள்ளனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அரிசிக்கொம்பன் யானை சூரியநல்லியைத் தாண்டி கோடீஸ்வரர்களும், மில்லியனர்களும் தங்கும்,ஸ்டெர்லிங் ரிசார்ட்டுக்கோ, மகிந்திரா கிளப்புக்கோ இதுவரை போனதில்லை. அதனுடைய நடமாட்டமெல்லாம் சூரியநெல்லிக்கு கிழக்கே தான். சின்னக்கானல் மற்றும் சாந்தம்பாறை பஞ்சாயத்தை மையப்படுத்தி சுற்றி வந்த அரிசிக்கொம்பன் முட்டுக்காடு பகுதியில் பிறந்தது. 1986 அல்லது 87 ல் இந்த யானை பிறந்திருக்க கூடும் என்று கணிக்கிறார்கள் யானை ஆராய்ச்சியாளர்கள். ஆரம்பத்தில் கள்ளக்கொம்பன் என்று அழைக்கப்பட்ட இந்த அரிசிக்கொம்பன், சாந்தம்பாறை மற்றும் சின்னகானல் பஞ்சாயத்துக்களில் இதுவரை உடைத்த வீடுகளின் எண்ணிக்கை 60. மிதித்துக் கொன்றவர்களின் எண்ணிக்கை 14.

1987-ல் பிறந்த இந்த யானையால் 2010 வரை எவ்வித நெருக்கடியும் அந்த பகுதி மக்களுக்கு இல்லை. 2000ம் ஆண்டிற்கு பிறகு சாந்தம்பாறை மற்றும் சின்னக்கானல் வட்டாரம் சுற்றுலா மாபியாக்களால் முற்றுகையிடப்பட்டது. சூரியநல்லியை ஏற்கனவே சுற்றுலா மாபியாக்கள் வளைத்து போட்டு விட்ட நிலையில், அரபு நாடுகளில் கோடிகளை குவிக்கும் மலையாள சகோதரர்கள் சூரியநெல்லியில் முகாமிட முடியாமல், சின்னக்கானல் மற்றும் சாந்தம் பாறையை மையப்படுத்தி நிலங்களை வாங்கிப் போட ஆரம்பித்தார்கள்.

நிலத்தை வாங்கிப் போட்டவர்கள் சும்மா இருக்காமல், நிலங்களை சுற்றி மின்வேலிகளை அமைக்க ஆரம்பித்தார்கள். சுற்றுலா மாபியாக்களின் இந்த அசுர வளர்ச்சிக்கு பிறகு, விழித்துக் கொண்ட கேரள மாநில அரசு கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் சாந்தம்பாறைக்கு தென்கிழக்கே, மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா என்ற பூங்காவை நிறுவியது.

சின்னகானலில் மக்களோடு பழகிவிட்ட இந்த அரிசி கொம்பனை போன்றவர்கள், நினைத்தால் சாந்தம்பாறையை தாண்டி மதிகெட்டான் சோலைக்குள் புகுந்திருக்கலாம். ஆனால் சின்னக்கானல் மற்றும் சூரியநெல்லியில் இருக்கும் இதமான சீதோஷ்ணம், மதிகெட்டான் சோலையில் இல்லை என்பதால், இந்த அரிசிக்கொம்பனால் அங்கு நகர முடியவில்லை. 2006 காலகட்டத்தில் சூரியநெல்லிலிருந்து பி.எல்.ராம் வழியாக போடிமெட்டு வரும் வழியில், சூரியநெல்லிக்கு கிழக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் 150 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்ட மூணார் கேட்டரிங் காலேஜ், யானை வழித்தடத்தை முற்றாக துடைத்தெறிந்த ஒரு சம்பவமாக ஆகிப்போனது.

அந்தப் பகுதியில் ஏலக்காய் தோட்டங்களை வைத்திருக்கும் தமிழர்கள் எவரும் மின்வேலி அமைப்பதில்லை என்கிறது நிலவியல். உண்மையும் அதுதான். அந்த அடர்ந்த வனப்பகுதியில் மூணார் கேட்டரிங் காலேஜ் எழுப்பிய மின்வேலி யானைகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியது. ஹேரிசன் மலையாளம் பிளாண்டேசன் வைத்திருக்கும் தேயிலை தோட்டங்களுக்கும் மின்வேலி கிடையாது. ஆனால் சொகுசு விடுதி காரர்கள் நிலத்தை வாங்கியதும் செய்த முதல் வேலை தங்கள் நிலத்தை சுற்றி மின் வேலி அமைத்து யானைகளை விரட்டுவது.

உயர்தர சொகுசு விடுதிகள் சூரியநெல்லியை சுற்றி அமைந்திருந்ததால் தங்கள் விடுதிகளில் தங்கி இருக்கும் சுற்றுலாவாசிகளுக்கு ட்ரெக்கிங் என்ற பெயரில் இரவு நேர சாகசப் பயணத்தை அனுமதித்து யானைகளை மூர்க்கமடைய செய்தார்கள். கொழுக்கு மலையில் ஒரு தமிழ் தேயிலை கம்பெனி இருக்கிறது. உடனடியாக இழுத்து பூட்டப்பட வேண்டிய பட்டியலில் அது முதலிடத்தில் இருக்கிறது. காரணம் இந்த கம்பெனி தேயிலை விவசாயம் மட்டும் செய்யவில்லை. அங்கு தங்கும் குடில்கள் அமைகிறேன் என்கிற பெயரில் நூற்றுக்கணக்கான கேம் செட்டுகளை அமைத்து ஆயிரக்கணக்கான சுற்றுலா வாசிகளை அங்கு தங்க வைத்து கருப்பு வெள்ளையில் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கொழுக்குமலை தேயிலை கம்பெனி செய்யும் ஒரு அபாயகரமான வேலை என்னவென்றால் வெறும் துணியினாலான குடில்களில் சுற்றுலா வாசிகளை தங்க வைத்து இருப்பதால், யானைகளை அந்த பிரதேசத்தில் உலவ அனுமதிப்பதில்லை. வெடிவைத்து விரட்டுவது ஆட்களை வைத்து விரட்டுவது என நீண்ட காலமாகவே யானைகளை மூர்க்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அரிசி கொம்பன் போன்றவர்களை மூர்க்கத்தனமாக உருவாக்கியது ரிசார்ட் மாபியாக்கள் தானே தவிர ரேஷன் கடைகள் அல்ல...இன்றைய நிலையில் காடுகளில் வாழும் வனவிலங்குகளில் மனிதர்களைக் கண்டால் முதலில் அடித்துக் கொல்லும் மன நிலைக்கு வரும் முதல் உயிரினம் யானை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அந்த அளவிற்கு யானை கூட்டம் இந்த மனித கூட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

சாந்தம்பாறை பஞ்சாயத்து தலைவர் லிஜி வர்கீஸ் வரிகளில் கூறுவதானால், பத்தாண்டுகளுக்குப் பிறகு நாங்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதாகத்தான் இருக்கிறது. அந்த அளவிற்கு அரிசி கொம்பரின் ஆட்டம் சாந்தம்பாறை மற்றும் சின்னக்கானல் பஞ்சாயத்து பகுதிகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்தது. நீண்டகாலமாகவே பூப்பாறையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் ஆனையிரங்கல் பகுதியில் யானைகளின் பெரிய அட்டகாசம் எதுவும் இல்லை. ஆனால் சமீப காலமாக நள்ளிரவு நேரங்களில் தேனியில் இருந்து மூணாறு வரும் பேருந்துகளையே ஆனையிரங்கலருகே மறிக்கும் அளவிற்கு சென்றிருக்கிறது யானைக் கூட்டம்.

உள்ளபடியே 2017 ஜூலையிலேயே ஆனையிரங்கல் அருகே அரிசி கொம்பனை பிடிக்க மலையாள வனத்துறை திட்டமிட்டு காய் நகர்த்தியது. ஆனால் ஐந்து முறை மயக்க ஊசி செலுத்தியும் கட்டுக்கடங்காமல் அரிசி கொம்பன் தெறித்து ஓடியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. 2018ல் இரண்டாவது முறையும் கேரள மாநில தலைமை வனப் பாதுகாவலர் தலைமையில் அரிசிக்கொம்பனை பிடிக்க களமிறங்கியது கேரள வனத்துறை. ஆனால் இந்த முறையும் அரிசி கொம்பன் மூர்க்கமடைந்து வெளியேறியதால் அந்தத் திட்டம் இரண்டாவது முறையாக கைவிடப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் அரிசி கொம்பன் பிடிபட்ட போது அது மூன்றாவது முயற்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த விவரங்களை அறியாத செண்பகத்தொழுவைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், அரிசி கொம்பனை மறுபடியும் சின்னக்கானலுக்கு கொண்டு வா என்று போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் சின்னக்கானல் மற்றும் சாந்தம்பாறை பகுதிகளில் வாழும் யானைகளை காப்பாற்ற வேண்டுமானால் தேவிகுளம் தாலுகாவை *building free zone* ஆக அறிவிக்க வேண்டும்.

இதனை இந்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் செய்வாரா. வனமாபியாக்களை முற்றிலும் ஒழித்து, விலங்கு மனித மோதலை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கேரளாவில் தற்போது ஆளுமை செய்து வரும் வனமாபியாக்கள், அதிக எண்ணிக்கையில் உள்ள யானைகளை இன்னமும் துன்புறுத்தி வருகின்றனர். இப்படி யானைகளுக்கு கொடுக்கப்படும் துன்பம், மேலும் பல அரிசிக் கொம்பனை உருவாக்கி விடும். இதனை தடுக்க வேண்டும் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் வலியுறுத்தி உள்ளார்.

Updated On: 8 Jun 2023 6:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!