ராணுவ பணியை உதறி விட்டு போலீஸ் பணியை நேசித்த வால்டர் தேவாரம்... பகுதி 2
Walter Devaram IPS-ராணுவ பணியை உதறி விட்டு போலீஸ் பணியை நேசித்த வால்டர் தேவாரம் ஐபிஎஸ் பற்றிய இன்றைய பகுதி 2 தொகுப்பில் காண்போம்.
HIGHLIGHTS
Walter Devaram IPS-தமிழக காவல்துறை கதாநாயகன் என வர்ணிக்கப்படும் வால்டர் தேவாரம் ஐ.பி.எஸ். பற்றிய தொடரில் இன்று பகுதி இரண்டில் அவரது பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை, ராணுவ பணி ,அதிலிருந்து அவர் தன்னை உதறிவிட்டு தான் விரும்பி நேசித்த காவல்துறை பணியை எவ்வாறு ஏற்றார் என்பதை பற்றி இன்று பார்க்கலாம்.
வால்டர் தேவாரம் ஏற்கனவே கூறியது போல இயற்கை எழில் சூழ்ந்த மூணாறு மலைப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் அவரது பெற்றோர்கள் இருந்ததால் இயற்கையுடன் கலந்து அவரது சைல்டுஹுட் பருவம் தொடங்கியது. பிற்காலத்தில் தன்னுடைய உடல் வலிமைக்கும், உள்ளம் வலிமைக்கும் இன்று வரை ஆரோக்கியமாக இருப்பதற்கும் இந்த பாலப்பருவமே அடிப்படையாக அமைந்தது என்று தேவாரம் இன்றும் பெருமையுடன் குறிப்பிட்டு வருகிறார். தினமும் 18 கிலோமீட்டர் நடந்தே பள்ளிக்கு செல்லும் நிலைமையில் இருந்த அவருக்கு மிகப்பெரிய ஒரு உடற்பயிற்சியாக அமைந்தது.
கேரளாவின் மூணாறு, தேவிகுளம், பீர்மேடு பகுதியில் உள்ள தமிழ் மக்கள் பெரும்பாலும் எஸ்டேட் பகுதியில் தான் வசித்து வந்தனர். அவர்களது பிரதான தொழில் எஸ்டேட்டில் வேலை செய்வது தான். எஸ்டேட் வேலை போக இந்திய ராணுவத்திலும் பலர் பணிபுரிந்து வந்தனர். அந்த வகையில் தனது தாத்தா, தந்தையை தொடர்ந்து வால்டர் தேவாரமும் ராணுவ பணியை விரும்பினார். எஸ். எஸ். எல். சி. படிப்பை முடிந்ததும் அவர் ராணுவத்தில் சேருவதற்காக நேஷனல் டிபன்ஸ் அகாடமியில் அதற்கான தேர்வினை எழுதினார். இன்டர்மீடியட் முடித்ததும் சென்னை ஒய். எம். சி. ஏ. கல்லூரியில் தனக்கு மிகவும் பிடித்தமான உடற் கல்வியில் தொடர்பான படிப்பை முடித்தார். அதன் பின்னர் பி.ஏ.முடித்தார்.
அவர் எம்.ஏ. படித்துக் கொண்டிருந்தபோது துறை பேராசிரியர் சத்தியநாத ஐயர் ஏன் நீங்கள் குரூப் 1 தேர்வு எழுதக்கூடாது என வினவினார். அதற்கு தேவாரம் எனக்கு அதில் விருப்பமில்லை. நான் ஐ.பி.எஸ். அதிகாரியாக விரும்புகிறேன் என பதில் அளித்து விட்டு அதற்கான இந்திய குடிமைப் பணி பிரிவினை எழுதினார். இந்த தேர்வு முடிவு வெளி வருவதற்குள் இந்தியா-சீனா போர் தொடங்கிவிட்டது.
தேவாரம் ஏற்கனவே தேசிய மாணவர் படை எனப்படும் என்.சி.சி.யில் இளநிலை அதிகாரியாக பணியாற்றி சி. சர்டிபிகேட் வைத்திருந்ததால் அவசர தேவையை கருதி ராணுவத்தில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. உடனடியாக அவர் இந்திய ராணுவத்தின் நேபா படைப்பிரிவில் தன்னை இணைத்துக் கொண்டார். நமது நாட்டை காப்பதற்காக போரில் ஈடுபட்டார். இரண்டு மாத காலத்தில் போர் முடிந்தது. போர் முடிந்து விட்டாலும் ராணுவ பணி மீது ஒரு ஈர்ப்பு இருந்ததால் டேராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகாடமியில் சேர்ந்தார், வால்டர் தேவாரம்.
அவர் மிலிட்டரி அகாடமியில் சேர்ந்த சில நாட்களில் ஐ.பி.எஸ். தேர்வுக்கான முடிவு வெளியானது. அதில் அவர் இந்திய அளவில் முதலிடம் பெற்றார். அப்பொழுது அங்கு பணியில் இருந்த பிரிகேடியர், தேவாரத்திடம் ராணுவ பணி என்பது குறுகிய கால பணி. ஐ.பி.எஸ். தேர்வில் உங்களுக்கு நல்ல ரேங்க் கிடைத்து இருப்பதால் நீங்கள் ஏன் போலீஸ் அதிகாரி பணியில் சேரக் கூடாது? என கேள்வி எழுப்பினார். அவரது கேள்வியில் இருந்த நியாயத்தையும், தான் மிகவும் விரும்பி நேசித்த காவல்துறை பணியையும் மனதில் கேள்வியாக எழுப்பினார். அதில் அவருக்கு தான் மிகவும் நேசித்த காவல் பணியே சிறந்தது என பதில் கிடைத்தது. அதனால் தான் விருப்பப்பட்டு சேர்ந்த ராணுவ பணியில் இருந்து வெளியேறி தமிழக காவல்துறை பணியில் சேர்ந்தார். இதுதான் அவரது ராணுவ பணியும் அதனை உதறிவிட்டு காவல்துறை பணியில் சேர்ந்ததற்கான காரணமும் ஆகும்.
தனது பள்ளி பருவம் மற்றும் இளமைக்காலத்தில் திரைப்படங்கள் பார்த்ததே கிடையாது என தேவாரம் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். காரணம் பள்ளி செல்வதற்கே 18 கிலோமீட்டர் தினமும் நடக்க வேண்டியது இருந்ததால் சினிமா தியேட்டர் என்பதற்கெல்லாம் வாய்ப்பு இல்லாமல் போனது. சென்னைக்கு படிக்க வந்த பின்னரும் அவருக்கு திரைப்படங்கள் மீது அதிக நாட்டம் கிடையாது .திரைப்பட நடிகர் நடிகைகளை பார்த்ததெல்லாம் தான் நீலகிரி எஸ். பி. யாக இருந்த போதுதான் என்றும் கூறியிருக்கிறார்.
ஏனென்றால் தமிழக காவல்துறை பணியில் தேவாரம் சேர்ந்ததும் அவர் முதன் முதலாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆக நியமிக்கப்பட்டது நீலகிரி மாவட்டத்தில் தான். நீலகிரி மாவட்டம் சினிமா நடிகர், நடிகைகள் அடிக்கடி ஓய்வு எடுப்பதற்காக வரும் இடம் மற்றும் அதிக அளவில் சினிமா சூட்டிங் எடுக்கப்படும் இடம் என்பதால் அந்த வகையில் அப்போது நடிகர்களாக இருந்த எம்.ஜி. ஆர். சிவாஜி, ஜெயலலிதா ஆகியோரை பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறியிருக்கிறார்.
நீலகிரி மாவட்டம் ஒரு அமைதியான மாவட்டம் என்று கூறும் வால்டர் தேவாரம் அங்கு எஸ்.பி.யாக இருந்தபோது அங்கு நடந்த முக்கியமான ஒரு நிகழ்வை பற்றி கூறியிருக்கிறார். அங்கு நடைபெற்ற ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் தான் அது. வால்டர் தேவாரத்தின் 35 ஆண்டுகால போலீஸ் பணியில் அவர் நடத்திய முதல் துப்பாக்கி சூடு சம்பவம் அது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கி சூடு எதற்காக நடத்தப்பட்டது? அதற்கான காரணம் என்ன என்பது பற்றி அவரே கூறி இருக்கிறார். அது என்ன என்பதை நாளை பார்க்கலாம். (இன்னும் வரும்).
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2