விருதுநகரில் பத்திரிகையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நக்கீரன் நிருபர், புகைப்பட கலைஞரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சியில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, விருதுநகர் பத்திரிக்கையாளர் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், விருதுநகர் மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் மாவட்ட தலைவர் கமலக்கண்ணன், செயலாளர் மணிகண்டன் தலைமையில், நக்கீரன் நிருபர், புகைப்பட கலைஞர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் பத்திரிகையின் தலைமை நிருபர் பிரகாஷ், புகைப்பட கலைஞர் அஜித்குமார் ஆகிய இருவரும் சென்ற காரை வழிமறித்த ஒரு கும்பல், அவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கியது. செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பத்திரிக்கையாளர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட பத்திரிக்கையாளர் நலச்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மாவட்ட பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.