விருதுநகர் அருகே பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்கு
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்
HIGHLIGHTS
விருதுநகர் அருகே சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரித்த உரிமையாளர் மீது வழக்கு..
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகேயுள்ள நாட்டார்மங்களம் பகுதியில், ஆமத்தூர் பகுதியைச் சேர்ந்த ராவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கவில்லை என்ற காரணங்களால், கடந்த ஏப்ரல் மாதம் வருவாய்த்துறை அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் சீல் வைக்கப்பட்ட ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் நடப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் பட்டாசு ஆலை கண்காணிப்பு சிறப்பு தாசில்தார் பொன்ராஜ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துணை இயக்குனர் சித்ரா தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பட்டாசு ஆலையில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக கூறி அதிகாரிகள் அந்த ஆலை மீது நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களை ஆலையை விட்டு வெளியேற்றினர். ஆலை உரிமையாளர் ராவணன் மீது, ஆமத்தூர் காவல் நிலையத்தில் வருவாய்த்துறையினர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.