விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற வழிமுறைகள்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு குறித்த வழிமுறைகளை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
HIGHLIGHTS
விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்தில் புதிய விவசாய மின் இணைப்பு பெறுவது தொடர்பாக மேற்பார்வை பொறியாளர் குமாரசுவாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2013ம் ஆண்டு மார்ச் 31 வரை சாதாரண முன்னுரிமையில் விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தோர், அப்பகுதி செயற்பொறியாளரை அணுகி, 30 நாள் அறிவிப்பு கடிதம் பெற்று உரிய வருவாய் ஆவணம் சமர்ப்பித்து மின் இணைப்பு பெறலாம்.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை பதிந்தவர்கள் 10 ஆயிரம் ரூபாயும், 2018ம் ஆண்டு பதிந்தவர்கள் 25 ஆயிரம் ரூபாய் அல்லது 50 ஆயிரம் ரூபாயில் சுயநிதி திட்டத்தில் மின் இணைப்பு பெறலாம். இந்த ஆண்டுகளில் பதிந்த விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே அறிவிப்பு கடிதம் வழங்கப்படும். கடிதம் கிடைத்த விண்ணப்பதாரர் சமீபத்திய தேதியில் வி.ஏ.ஓ.,விடம் பெற்ற நில உரிமைச் சான்று, மின் இணைப்பு கோரும் கிணறு இருப்பிடத்தை குறிக்கும் வரைபடத்தோடு, குறிப்பிட்ட பிரிவு அலுவலகத்தில், குறித்த கால கெடுவுக்குள் வழங்கி முன்னுரிமையை பதிய வேண்டும்.
தயார் நிலை முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும்.விரைவு மின் இணைப்பு வழங்கல் திட்டம் மூலம் 5 எச்.பி., வரையுள்ள மின் மோட்டார்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், 7.5 எச்.பி., வரை 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், 10 எச்.பி., வரை 3 லட்சம் ரூபாயும், 15 எச்.பி., வரை 4 லட்சம் ரூபாய் வீதம் செலுத்த வேண்டும்.
இந்த தொகையை மேற்பார்வை பொறியாளர், விழுப்புரம் மின்பகிர்மான வட்டம், விழுப்புரம் என்ற பெயரில் விழுப்புரத்தில் மாற்றத்தக்க வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும்.மேலும், விபரங்களுக்கு செயற் பொறியாளர்கள் விழுப்புரம் 94458 55738, கண்டமங்கலம் 94458 55769, செஞ்சி 94458 55784, திண்டிவனம் 94458 55835 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.