வேலூர் பளுதூக்கும் வீராங்கனை கவிதாவுக்கு சர்வதேச போட்டியில் பங்கேற்க நிதி உதவி
தேசிய அளவில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வேலூர் மாணவி கவிதாவுக்கு சர்வதேச போட்டியில் பங்கேற்க நிதியுதவி அளிக்கப்பட்டது
HIGHLIGHTS
சர்வதேச தேசிய அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வேலூரைச் சார்ந்த மாணவி கவிதாவிற்கு சர்வதேச அளவில் கஜகஸ்தான் நாட்டில் நடைபெறும் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்க, வேலூர் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான டி.எம்.விஜயராகவலு, திருமதி.பிரமிளா, அபுதாபியில் உள்ள அவரது மகன் டி.வி.ஜானகிநாத் குடும்பத்தினர் சார்பில் ரூபாய் 30 ஆயிரம் நிதி உதவி அளித்தனர்.
இதற்கென நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் ஆர்.சீனிவாசன், பயிற்சியாளர் ஆர்.யுவராஜ், சமூக ஆர்வலர் ஜி.ரஞ்சிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தந்தையை இழந்த நிலையில் வேலூர் மாநகராட்சியில் தற்காலிக அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் தாய் லட்சுமியின் வருவாயில் உடற்கல்வி பட்டம் பயின்று வரும் மாணவி டி.கவிதா. பயிற்சியாளர் ஆர்.யுவராஜ் அவர்களிடம் பெற்ற தொடர் பயிற்சியின் காரணமாகவும் தனது இடைவிடாத முயற்சியின் காரணமாகவும் 50க்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றுள்ளார்.