பறக்கும்படை கார் -லாரி மோதி விபத்து:பெண் காவலர் பலி
Election flying squad car accident with a lorry
HIGHLIGHTS
வேலுாரில் தேர்தல் பறக்கும் படையினரின் கார் மீது லாரி மோதியதில் பெண் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பி.கே.புரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் குடியாத்தம் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர்.அப்போது குடியாத்தத்தில் இருந்து காட்பாடி நோக்கிச் சென்ற லாரி எதிர்பாராதவிதமாக பறக்கும் படையினரின் கார் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.
கார் முழுவதுமாக நொறுங்கிய நிலையில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தப்பியோடிவிட்டார். பின்னர் பொதுமக்கள் விபத்துக்குள்ளான பறக்கும்படை காரில் இருந்தவர்களை மீட்டனர். பறக்கும்படை குழுவில் இருந்த வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணியாற்றிய மாலதி(45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் காரில் இருந்த வீடியோ ஒளிப்பதிவாளர் பிரகாஷ் மற்றும் மத்திய படை காவலர் மனோஜ் உள்ளிட்ட மூவரும் படுகாயத்துடன் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் எஸ்.பி.,செல்வகுமார் நேரில் ஆய்வு செய்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கே.வி.குப்பம் போலீசார், விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.