/* */

இன்று முண்டாசு கவிஞன் பாரதி பிறந்த தினம்..!

பாரதியார் பிறந்த தினமான இன்று, இனி தேசிய மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

HIGHLIGHTS

இன்று முண்டாசு கவிஞன் பாரதி பிறந்த தினம்..!
X

இன்று, மகாகவி பாரதி பிறந்த நாளை கொண்டாடுவோம்!

நவீன தமிழ் கவிதைகளுக்கு தகப்பன், நம் முண்டாசு கட்டிய முறுக்கு மீசை கவிஞன் பாரதி தான். தமிழ், தமிழர் நலன், பெண் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக ஒரு நுாற்றாண்டுக்கு முன்னரே தன் கவிதையால் உரக்க சொன்னவர்தான் நம் தேசிய கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். கவிஞராக மட்டுமின்றி சிறந்த எழுத்தாளராகவும், நல்ல பத்திரிகை ஆசிரியராகவும் இருந்தவர்.

'பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்' என்று பெண் உரிமைக்காக பாடியவர். 'சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;' என்று தீண்டாமை ஒழிப்பு குறித்து பாடியவரும் இவர் தான். தம் எழுத்துக்கள் மூலமாக, மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய நம் முண்டாசு கவிஞன் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு அறிவோம்.

இயற்பெயர் - சுப்பையா (எ) சுப்பிரமணியன், பிறப்பு - டிசம்பர் 11, 1882. பிறந்த இடம் - எட்டயபுரம், தமிழ்நாடு

மற்ற பெயர்கள் முண்டாசுக் கவிஞன், சக்திதாசன், பாரதியார்,

மகாகவி இருப்பிடம் - திருவல்லிக்கேணி, சென்னை

பணி - கவிஞர், எழுத்தாளர், விடுதலை போராட்ட வீரர், பத்திரிக்கையாசிரியர்

பெற்றோர் - சின்னசாமி ஐயர், லட்சுமி அம்மாள்.

துணைவியார் பெயர் - செல்லம்மாள், பிள்ளைகள் - தங்கம்மாள், சகுந்தலா

முக்கிய படைப்புகள்- கண்ணன் பாட்டு, குயில் பாட்டு. பாஞ்சாலி சபதம் மற்றும் பல சமயம் இந்து

இறப்பு - செப்டம்பர் - 11, 1921

மகாகவி பாரதியார், சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும், 1882 ம் ஆண்டு, டிசம்பர் 11ம் தேதி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் மகனாக பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணி.

பாரதியார் இளமை பருவம்

தனது 5 வயதிலேயே தன் தாயை இழந்த பாரதியார், ஏழு வயது முதலே கவிதையால் கர்ஜிக்க தொடங்கினார். இவருக்கு 11 வயது இருக்கும்போது இவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் பாராட்டி இவருக்கு 'பாரதி' என்ற பட்டத்தை வழங்கினார் எட்டயபுர மன்னர். அன்று முதல் இவர் பெயர் சுப்பிரமணிய பாரதியார் என்று அழைக்கப்பட்டார்.

திருநெல்வேலியில் உள்ள இந்து கல்லூரியில் 9 ம் வகுப்பு வரை படித்த பாரதியார், அப்போதே தமிழ் அறிஞர்களோடும், பண்டிதர்களோடும் சொற்போரில் சுதந்திரமாக ஈடுபட்டார். அதனால் அவரின் தமிழ் புலமை மேலும் அதிகரித்தது. அன்றைய திருநெல்வேலி சீமையில் வசித்த பலர். இவரின் புலமையை கண்டு வியக்க துவங்கினர்.


பாரதியார் திருமண வாழ்க்கை

1897 ம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி, 14 வயது மட்டுமே நிறைவடைந்த பாரதிக்கு, 7 வயது சிறுமியான செல்லம்மாளோடு நடந்தேறியது பாலியல் திருமணம். பின்னாளில் தன் கவிதைகள் மூலம் பாலியல் திருமணத்திற்கு எதிராக பொங்கி எழுந்தார் மகாகவி பாரதியார்.

16 வயதில் தன் தந்தையையும் இழந்த பாரதியார், அதன் பிறகு வறுமையில் வாடித் தவித்தார். பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு காசிக்கு சென்று அலகாபாத் பல்கலைக் கழகத்தில் சம்ஸ்கிருத மொழியையும், இந்தி மொழியையும் கற்றார். இது தவிர ஆங்கிலம், வங்காளம் போன்ற பிற மொழிகளிலும் தனிப் புலமை பெற்று விளங்கினார் பாரதியார்.

இத்தனை மொழிகளில் புலமை பெற்றதால்தான், 'யாம் அறிந்த மொழிகளிலே, தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று தெளிவாக சொன்னார் மகாகவி பாரதியார்.

4 ஆண்டுகள் காசியில் இருந்துவிட்டு தமிழகம் திரும்பினார் பாரதியார். பிறகு எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார். அழகிய தமிழ் கவிதைகள் பலவற்றிற்கு சொந்தக்காரரான பாரதியாரின் எழுத்துக்கள் முதல் முதலில் 1903 ம் ஆண்டு அச்சில் வந்தது. அதன் பிறகு மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார் பாரதியார். பிறகு 'சுதேசிய மித்திரன்' பத்திரிகையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார். இந்திய விடுதைலை போராட்டத்தில் பாரதியார் ஆற்றிய பணி தன்னுடைய தீராத சுதந்திர தாகத்தை தணிக்க, 1905 ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டினார் மகாகவி பாரதியார்.

அதன் பிறகு, கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ சிதம்பரம் பிள்ளை போன்றவர்களோடு, நெருங்கிய தொடர்ப்பு ஏற்பட்டது. அதன் பிறகு கல்கத்தாவில் தாதாபாய் நவ்ரோஜி தலைமையில் நடைபெற்ற மகா சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது சுவாமி விவேகானந்தரின் சிஷ்யர் நிவேதிக்கா தேவியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவரிடம் ஆசி பெற்ற பாரதியார், அவரை தம் ஞான குருவாக ஏற்றுக்கொண்டார். 1907 ஆம் ஆண்டில் "இந்தியா" என்னும் வார ஏட்டையும் "பால பாரதம்" என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார் பாரதியார்.


பாரதியின் சுதந்திர தாகம்

இந்திய விடுதலை போராட்டத்தில் பாரதியார் தீவிரமாக ஈடுபட துவங்கினார். தாம் ஆசிரியராக இருந்த 'இந்தியா' என்னும் பத்திரிகையை விடுதலைக்காக பயன்படுத்தினார். சுதந்திரப் போராட்டத்தில், பாரதியாரின் பாடல்கள் காட்டுத்தீயாய் பரவி தமிழர்களை வீறுகொள்ள செய்தது. 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது; சத்தியத்தின் நித்தியத்தை நம்பும்யாரும் சேருவீர்,' என்று நெருப்பு கனலாய் கொந்தளித்தார் மகாகவி பாரதியார்.

பாரதியாரின் சுதந்திர எழுச்சி மிக்க பாடல்களும், கேலி சித்திரங்களும் சுதந்திர போராட்டத்திற்கு கை கொடுத்து வழி நடத்தியது. இதனால் 'இந்தியா' பத்திரிகை மீது பிரிட்டிஷ் அரசின் பார்வை விழுந்தது. மேலும் பாரதியாருக்கு கைது வாரென்ட் பிறப்பித்ததாக தகவல் வந்தது. அதனால் தன் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரியில் தலைமறைவாக வாழ்ந்தார் பாரதியார். 1908ம் ஆண்டு முதல் 'இந்தியா' பத்திரிக்கை புதுவையில் இருந்து வெளி வரத் துவங்கியது. தன் பேனா முனை சிந்திய எழுத்துக்கள் மூலம் பெரும் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தார் பாரதியார். அவரது பத்திரிகை பிரச்சாரத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பத்திரிகையின் செல்வாக்கும் படிப்படியாக அதிகரித்தது. இதனை கவனித்த பிரிட்டிஷ் அரசு, அந்த பத்திரிகையை படிக்க தடை விதித்தது. இதனால் சென்னையில் பிறந்து புதுவையில் வளர்ந்த 'இந்தியா' பத்திரிகையும் பாதை அறியாது பாதியில் நின்றது.

புதுவையில் பாரதியாரின் கவிதை பத்திரிகை முடங்கியதே தவிர பாரதியாரின் புலமை முடங்கவில்லை. அந்த காலகட்டத்தில் தான், 'கண்ணன் பாட்டு', 'குயில் பாட்டு', 'பாஞ்சாலியின் சபதம்' போன்ற அமர கவிதைகள் பலவற்றை இயற்றினார் பாரதியார். அதோடு 1912 ம் ஆண்டு பகவத் கீதையை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார் பாரதியார்.

1918 ம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து வெளியேறி, பிரிட்டிஷ் எல்லையில் காலடி எடுத்து வைத்த உடன் கைது செய்யப்பட்டார் பாரதியார். 34 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டார் பாரதியார். விடுதலையானதும் தம் மனைவியின் ஊரான கடையம் என்னும் ஊரில் குடியேறினார். அடுத்த இரண்டு ஆண்டுகளையும் கடையத்திலேயே செலவிட்டார்.

கடையத்தில் இருந்த காலகட்டத்தில், பாரதியாரை வறுமை மீண்டும் சூழ்ந்துகொண்டது. தம் நிலையை விளக்கி சீட்டு கவிதை ஒன்றை எட்டயபுர மன்னருக்கு அனுப்பினார் பாரதியார். ஆனால் மன்னரிடமிருந்தும் எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை. உலகில் எல்லா உயிரினங்களும் பசியில்லாமல் வாழவேண்டும் என்ற எண்ணம், பாரதியாரிடம் அந்த வறுமை காலத்திலும் மேலோங்கி இருந்தது. வீட்டில் தன் மனைவி சமைக்க வைத்திருக்கும் சிறிதளவு அரிசியை கூட காக்கைக்கும் குருவிகளுக்கு வாரி இறைத்து விட்டு, தான் பசியோடு வாழ்ந்த நாட்கள் ஏராளம்.

இத்தகையை உணர்வுள்ள ஒருவரால் தான், 'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்று கவி பாட முடியும். வறுமையில் கூட தன்மானத்தோடு தான் வாழ்ந்தார் அந்த புரட்சிக் கவிஞன்.

வறுமையில் சில காலம் வாழ்ந்த பாரதியார், 1919 ம் ஆண்டு மீண்டும் சென்னைக்கு வந்தார். அப்போது ராஜாஜியின் வீட்டிற்கு ஒரு முறை சென்றபோது அங்கு மகாத்மா காந்தியை சந்தித்தார். இந்தியாவின் மும்மூர்த்திகளான ராஜாஜி, காந்தி மற்றும் மகா கவி பாரதியார் சந்தித்தது அதுவே முதலும் கடைசியும் ஆகும். பாரதியார் இறப்பு 1921 ம் ஆண்டு ஜூலை மாதம், தான் வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார் பாரதியார். அங்கு யாரும் எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானை அவரை தூக்கி எறிந்தது. அதனால் தலையிலும், கையிலும் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.

அவருக்கு இது ஒரு பேரதிர்ச்சியாக இருந்தது. அதனால் அவர் நோய்வாய்ப்பட்டார். சில நாட்களுக்கு பிறகு அவர் யானை தந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டபோதும், வயிற்று கடுப்பு நோயால் பாதிக்கப் பட்டார். மருந்துகளை சாப்பிட மறுத்த அவர், தனது 39 வது வயதில், 1921ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.

பாரதியார் எழுதிய நூல்கள்

பாஞ்சாலி சபதம், பாரதி அறுபத்தாறு, தேசிய கீதங்கள், விநாயகர் நான்மணிமாலை, கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, தோத்திரப்பாடல்கள், ஞானப்பாடல்கள், புதிய ஆத்திச்சூடி, பதஞ்சலியோக சூத்திரம், சந்திரிகையின் கதை, ,விடுதலைப் பாடல்கள், சின்னஞ்சிறு கிளியே, பொன்வால் நரி, பாரதியார் பகவத் கீதை, ஞானரதம், நவதந்திரக் கதைகள், ஆறில் ஒரு பங்கு.

பாரதியார் நினைவுச்சின்னங்கள்

பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்தில், அவருக்கு மணிமண்டபமும், திருவுருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. எட்டயபுரத்திலும், சென்னை திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த வீட்டினை, பாரதியார் நினைவு இல்லமாக மாற்றி அதை இன்றுவரை தமிழக அரசு பராமரித்து வருகிறது. அதோடு அங்கு பொதுமக்களும் சென்று பார்வையிடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.


தேசிய மொழிகள் தினம்

உ.பி.யில் உள்ள காசி என்னும் வாரணாசியில் அனுமர் படித்துறை பகுதியில் தமிழ் பிராமணர்கள் வாழ்கின்றனர். 4 தலைமுறைகளுக்கு முன்பு இங்கு குடியேறியவர்களுள் பாரதியாரின் அத்தை குப்பம்மாள் என்ற ருக்மணியின் கணவர் பிரம்ம ஸ்ரீகிருஷ்ண சிவனும் ஒருவர். இவரது 'சிவமடம்' என்னும் வீட்டில் பாரதியார் தன் இளம் வயதில் நான்கரை ஆண்டுகள் வாழ்ந்தார்.

இதையறிந்த மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்தர பிரதா, பாரதியாரின் வீட்டுக்கு நேரில் சென்ற அவர், அங்கு பெரிய அளவில் நினைவகம் அமைப்பதாக அறிவித்தார். இதற்கான பொறுப்பு வாரணாசி கலெக்டர் எஸ்.ராஜலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கு பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் அவரது அறிவுறுத்தலின் பேரில் 'காசி தமிழ்ச் சங்கமம்' ஒரு மாதம் நிகழ்ச்சி நடைபெறுவதும் காரணமானது. மேலும் பாரதியார் பிறந்த தினம், இனி தேசிய மொழிகள் தினமாகக் கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, பாரதி குடும்பத்தாருடன் பேசி அவர்களது வீட்டின் ஒரு சிறிய அறையை, நினைவகமாக்க முடிவு செய்தது. இதற்கான அரசு ஆணையை கடந்த ஜுலை 5-ம் தேதி வெளியிட்டு பாரதியார் நினைவு அறையின் பணிகளை முடித்துள்ளது.

இதன் திறப்பு விழாவை இன்று காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 11 Dec 2022 8:25 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...