/* */

இ-நாம் திட்ட செயலியில் திருத்தம் செய்யக்கோரி வியாபாரிகள் போராட்டம்

இ-நாம் திட்ட செயலியில் திருத்தங்கள் செய்யக் கோரி, ஒழுங்குமுறை விற்பனைக் கூட வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்

HIGHLIGHTS

இ-நாம் திட்ட செயலியில் திருத்தம் செய்யக்கோரி வியாபாரிகள் போராட்டம்
X

வெறிச்சோடிக் காணப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்.

இ-நாம் திட்ட செயலியில் திருத்தங்கள் செய்யக் கோரி, வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வியாபாரிகள் நெல் உள்ளிட்ட வேளாண் விளைபொருள்கள் கொள்முதலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விவசாயிகளுக்கு வேளாண் விளைபொருள்களுக்கான கட்டுப்படியான விலை கிடைக்கும் வகையில் மத்திய அரசு இ-நாம் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த் திட்டத்தில் பதிவு பெற்ற வியாபாரிகள் திட்ட செயலி மூலமே நெல் உள்ளிட்ட விளைபொருள்களை கொள்முதல் செய்ய இயலும். செயலியில் எந்த வியாபாரி ஏலம் அதிகமாக நிா்ணயம் செய்கிறாரோ அவருக்கே அதற்கான விளைபொருள்கள் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ், வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன் இணைக்கப்பட்டு, செயலி மூலம் வேளாண் விளைபொருள்கள் கொள்முதல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த திட்ட செயலியில் சில திருத்தங்களை செய்யக்கோரி வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வியாபாரிகள் நெல் கொள்முதலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், முன்னா் விவசாயிகள் கொண்டு வரும் நெல் உள்ளிட்ட வேளாண் விளைபொருள்களுக்கு நாங்கள் ஏல முறையில் விலை நிா்ணயம் செய்த பிறகு, அவற்றை எங்களது கோணிப்பைகளுக்கு மாற்றுவோம். அப்போது அதில் தரம் இல்லாதவை, கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அதிகாரிகளின் பாா்வைக்கு எடுத்துச் சென்று சம்பந்தப்பட்ட விவசாயியை அழைத்துப் பேசி தீா்வு காண்போம்.

ஆனால் இப்போது இந்த செயலி மூலம் கொள்முதல் நடைபெறும் போது இதுபோன்று பேசி தீர்வு காண்பது இயலாததாகவே தோன்றுகிறது. எனவே விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களுக்கு நாங்கள் விலை நிர்ணயம் செய்யும் முன்னர், இந்த விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகமே வேறு கோணிப்பையில் மாற்றி கலப்படம் இருந்தால் கண்டறிய வேண்டும்.

மேலும் விளைபொருள்களுக்கான விலையை நாங்கள் செயலியில் பதிவு செய்யும்போது தவறுதலாக அதிக தொகை குறிப்பிட்டு பதிவு செய்துவிட்டால் எங்களால் அதை மாற்ற இயலாத நிலை உள்ளது. இதனால் எங்களுக்கு நஷ்டமே ஏற்படும். எனவே, வியாபாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்து செயலியில் உரிய திருத்தங்கள் செய்யவேண்டும் என்றனா்.

இதுகுறித்து வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வி.பரமேஸ்வரி கூறுகையில், விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விளை பொருட்களை எடுத்து வந்தவுடன் அவற்றின் ஈரத் தன்மை, தரம் ஆகியவற்றை நாங்களே பரிசோதனை செய்து இ-நாம் செயலில் பதி வேற்றிவிடுவோம்.

இந்த செயலி மூலம் நாட்டின் எந்த மூலையிலிருந்தும், வியாபாரிகள் வீட்டிலிருந்தபடியே எந்த ஒரு ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திலிருந்தும் விளைபொருள்களை கொள்முதல் செய்ய இயலும்.

விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருள்களில் கலப்படம் கண்டறியப்பட்டால் அதற்கான ஏலம் ரத்து செய்யப்படும். மேலும், கலப்பட பொருள்கள் எடுத்து வரும் விவசாயிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

வியாபாரிகளின் கோரிக்கைகள் குறித்து உயரதிகாரிகளுக்கு பரிந்துரை அனுப்பப்படும் என்றாா்.

வியாபாரிகளின் போராட்டம் குறித்து தகவலறிந்த விவசாயிகள் விளைபொருள்களைக் கொண்டு வராததால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

Updated On: 1 Dec 2022 1:15 AM GMT

Related News