சாலையோர பள்ளத்தில் பாய்ந்த பேருந்து: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 48 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
HIGHLIGHTS
பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்று திரும்பிய பஸ் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 48 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் அருகே மேல் புதுப்பாக்கம் கிராமத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அங்கு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 48 மாணவர்களை ஆசிரியர்கள் ஒரு தனியார் பஸ்சில் சுற்றுலா அழைத்துச் சென்றனர். மாணவர்கள் செஞ்சி கோட்டை, புதுச்சேரி பகுதிகளில் சுற்றி பார்த்து விட்டு வந்தவாசி வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
வந்தவாசியை அடுத்த தெள்ளூர் கிராமத்தில் வரும்போது, சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் பஸ் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் மாணவர்கள் அபயகுரல் எழுப்பினர்.. அவர்களின் சத்தத்தைக் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து மாணவர்களை மீட்டு அங்குள்ள இடத்தில் அமர வைத்தனர். அதில் அதிர்ஷ்டவசமாக 48 மாணவர்களும் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வந்தவாசி வடக்குப் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொக்லைன் எந்திரம் மூலம் விபத்துக்குள்ளான பஸ்சை மீட்டனர். மீட்கப்பட்ட அதே பஸ்சில் மாணவர்களை ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தனர்.