வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து 45 பவுன் நகை கொள்ளை
Window Bars- திருவண்ணாமலையில் ஆள் இல்லாத வீட்டில் ஜன்னல் கம்பிகளை உடைத்து மர்ம நபர்கள், 45 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்
HIGHLIGHTS
Window Bars- திருவண்ணாமலையில் ஆள் இல்லாத வீட்டில், ஜன்னல் கம்பிகளை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருவண்ணாமலையை அடுத்த நல்லவன் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சர்வேசா கார்டனில் ரமேஷ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை ஈசானிய லிங்கம் எதிரே உள்ள அம்மணி அம்மன் சித்தர் பீடத்தின் நிர்வாகியாக உள்ளார்.
இவர் நேற்று முன்தினம் வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பக்கவாட்டில் இருந்த ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 45 பவுன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் நேற்று காலை ரமேஷுக்கு தொடர்பு கொண்டு, வீட்டின் ஜன்னல் கம்பிகள் உடைந்து இருப்பதாக தகவல் கூறினர்.
இதை அடுத்து அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ஜன்னல் கம்பிகளை உடைத்து வீட்டினுள் வந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி மற்றும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2