திருவண்ணாமலை நகர்மன்ற தலைவர் மக்களிடம் நேரடியாக குறை கேட்டார்
திருவண்ணாமலை நகராட்சியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து பொதுமக்களிடம் நகர்மன்ற தலைவர் நேரடியாக குறை கேட்டார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சாலை,குடிநீர், கால்வாய் ,மின்விளக்கு போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வார்டு வாரியாக பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் மற்றும் கருத்து கேட்டு நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதனடிப்படையில் திருவண்ணாமலை 35வது வார்டு மக்களை நேரில் சந்தித்து மக்கள் குறை கேட்கும் திட்டத்தை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தொடங்கி வைத்தார்.
அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வார்டு மக்களை நகர மன்றத் தலைவர் சந்தித்தபோது மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாகவும் நேரடியாகவும் நகர மன்ற தலைவரிடம் அளித்தனர். உடனடியாக நகரமன்ற அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை அளித்து உடனடியாக நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார் . அதைத்தொடர்ந்து மக்களின் கோரிக்கைகளான கால்வாய் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுவது, வீதி தோறும் விளக்குகள் போன்ற வசதிகள் உடனடியாக செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.
பொதுமக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நகரமன்ற அதிகாரிகளும் உடன் வந்திருந்தனர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் திருவண்ணாமலையில் அனைத்து பகுதிகளிலும் சாலை போட்டு தர வேண்டும் என்று கூறியுள்ளார். அனைத்து வசதிகளையும் நகர மக்களுக்கு செய்து தர வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் காட்டுகிறார். கண்டிப்பாக நீங்கள் கேட்கின்ற அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று பொதுமக்களிடம் நிர்மலா வேல்மாறன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம் 35 வது வார்டு கவுன்சிலர் பாப்பாத்தி, திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், நகராட்சி பொறியாளர்கள், நகராட்சி ஆய்வாளர்கள் மற்றும் நகர மன்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.