கொரோனா தடுப்பூசி மெகா முகாம்: வெற்றிபெற பாடுபட்ட அனைவருக்கும் ஆட்சியர் பாராட்டு
கொரோனா தடுப்பூசி மெகா முகாம் வெற்றி அடைய பாடுபட்ட அனைத்துதரப்பினருக்கும் திருவண்ணாமலை ஆட்சியர் நன்றி தெரிவித்தார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1004 முகாம்களில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாம் வெற்றி பெற ஒத்துழைப்பு அளித்த அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ப. முருகேஷ் வெளியிட்ட தகவல்: திருவண்ணாமலை மாவட்டத்தில் 1004 முகாம்களில் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் 1,04,325 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்து பொது மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இம் முகாம்கள் சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பொதுப்பணித்துறை அமைச்சர், தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவ துறை சார்ந்த அனைத்து நிலை பணியாளர்கள், வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சி துறை மற்றும் நகராட்சி, பேரூராட்சி துறையினர், காவல் துறையினர், அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், பள்ளி ஆசிரியர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது அரசிடம் இருந்து கூடுதல் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது. தடுப்பு ஊசி போட இயலாதவர்களுக்கு அடுத்த மூன்று தினங்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொண்டு பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.