திருவண்ணாமலையில் தென்னிந்திய பழங்குடி இருளர் முன்னேற்ற சங்க விழா
திருவண்ணாமலையில் தென்னிந்திய பழங்குடி இருளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் உலக பழங்குடியினர் தினவிழா நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் தென்னிந்திய பழங்குடி இருளர் முன்னேற்ற சங்கம் சார்பில் உலக பழங்குடியினர் தினவிழா நடைபெற்றது. மாநில பொது செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் விவேகானந்தன், கவுரவ தலைவர் முத்து, மாநில துணைத்தலைவர் படவேட்டான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் முருகன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இருளர் கூட்டமைப்பு மாநில தலைவர் இருளப்பூ செல்வகுமார், செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. மு.பெ.கிரி, தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
முன்னதாக விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்திலிருந்து பழங்குடியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது பாரம்பரிய வாழ்க்கை முறையை உணர்த்தும் வகையில் நடனமாடியபடி கோரிக்கைகளை வலியுறுத்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருமண மண்டபம் வரை ஊர்வலமாக வந்தனர்.
விழாவில் அரசியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 66 ஆண்டுகளாகியும் தமிழ்நாட்டில் இதுவரை பழங்குடி ஆய்வு ஆணைக்குழு அமைக்கப்படவில்லை. இதனை உடனடியாக நியமித்து உண்மையான பழங்குடியின பட்டியலை வெளியிட வேண்டும்.
பழங்குடி பிரிவில் உள்ள 36 இன குழுக்களில் பின்தங்கிய நிலையில் உள்ள இருளர் இன குழுவினருக்கு இடஒதுக்கீடு செய்து தனி சலுகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியினருக்கு பல்நோக்கு விவசாய கூட்டுறவு சங்கம் தொடங்க வேண்டும்.
ஆகஸ்டு 9-ந் தேதி ஆதிவாசிகள் தினத்தை அரசு விடுமுறை நாளாக அறிவித்து ஆண்டுதோறும் ஆதிவாசி கலைவிழா மற்றும் மாநாடு பழங்குடியினர் நலத்துறை மூலமே அரசு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில் மாநில துணைத்தலைவர் வீரப்பன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பூ.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.