நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, கடைக்காரர்கள் ஆர்ப்பாட்டம்
நகராட்சி அலுவலர்களின் நடவடிக்கையை கண்டித்து, பஸ் ஸ்டாண்ட் கடைக்காரர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மத்திய பஸ் ஸ்டாண்டில் பெட்டிக்கடைகள், பழக்கடைகள், ஸ்வீட் கடைகள் மற்றும் ஓட்டல்கள் என 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
மத்திய பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளில் நகராட்சி ஊழியர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இருக்கின்றனவா என அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது முறுக்கு, மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனைப் பார்த்த நகராட்சி ஊழியர்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதாகக் கூறி கடைகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதித்தனர். மேலும், அங்கிருந்த பொருள்களை குப்பைக் கூடையில் போட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்தால், கடைகளுக்குச் 'சீல்' வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பஸ் ஸ்டாண்டில் உள்ள அனைத்து கடைகாரர்களும், கடைகளை அடைத்து பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே மெயின் ரோட்டில், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி சாலை மறியலை கைவிட செய்தனர்.
அதைத்தொடர்ந்து அவர்கள் கூறுகையில், பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளில் மட்டும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று அடிக்கடி சோதனை என்ற பெயரில் வந்து ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிப்பதால், நாங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். தொழில் செய்ய முடியவில்லை. கடை வாடகையும் அதிகரித்துள்ள நிலையில், நகராட்சி அலுவலர்களின் இந்த நடவடிக்கையால் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, என்றனர்.
தொடர்ந்து போலீசாரும், நகராட்சி அலுவலர்களும் கடைக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடன்பாடு ஏற்பட்டது. பின்னர் பஸ் ஸ்டாண்டில் மூடப்பட்ட கடைகள் திறக்கப்பட்டன.