திருவண்ணாமலையில் தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி
திருவண்ணாமலையில் தமிழக 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
HIGHLIGHTS
தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி திருவண்ணாமலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆட்சியைப் பிடிப்பதற்கும், ஆட்சியை தக்க வைப்பதற்கும் அரசியல்வாதிகள் தேவையற்ற இலவசங்களை போட்டி போட்டுக் கொண்டு அறிவித்தால் இலங்கை போன்ற நிலை தான் தமிழகத்துக்கு ஏற்படும்.
தமிழ்நாட்டில் உணவிற்கும், மதுவிற்கும், போதை பொருட்களுக்கும் வேறுபாடு தெரிவதில்லை. அதன் விளைவாக தான் கள் தடை செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் என்பது வேறு, மது என்பது வேறு, கள் என்பது வேறு கள் என்பது உலக அளவில் உணவு பட்டியலில் உள்ளது. தமிழகத்தில் கள் மீதான தடையை நீக்க வேண்டும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் கள்ளை உணவு பட்டியலில் வைத்துள்ளது. இது ஏன் அரசுக்கும், அரசியல் கட்சியினருக்கும் தெரியவில்லை. 33 ஆண்டுகளாக கள்ளுக்கு ஏன் தடை நீக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் யூரியா தட்டுப்பாடு நிலவி வருகிறது. யூரியா கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. பல உரங்களின் விலை 100 சதவீதத்திற்கு மேலாக விலை உயர்ந்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.800-க்கு விற்கப்பட்ட உரங்கள் தற்போது ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. யூரியா மற்றும் உர பதுக்களுக்கு அரசு அதிகாரிகள் வியாபாரிகளுக்கு துணை நிற்கின்றனர்.
திருவண்ணாமலையில் மரங்களை வெட்டாமல் கிரிவலப் பாதையை அகலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பலர் கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கழுத்தில் கோரிக்கை பதாகைகளை தொங்கவிட்டு நூதன முறையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.