போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி
Awareness In Tamil- திருவண்ணாமலையில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
Awareness In Tamil- போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து திருவண்ணாமலையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள காந்தி சிலை அருகில் மாணவ, மாணவிகள் பங்கேற்று கைகளை கோர்த்தபடி நின்று போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து கோஷங்கள் எழுப்பினர். காந்தி சிலை அருகில் இருந்து ராஜகோபுரம் முன்பு, கடலை கடை மூலை சந்திப்பு, திருவூடல் தெரு, பெரிய தெரு, சின்னக்கடை வீதி, மத்திய பஸ் நிலையம், அறிவொளி பூங்கா வழியாக சென்று அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள ஈசான்ய மைதானம் வரை மனித சங்கிலியாக மாணவ, மாணவிகள் நின்றனர்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் முருகேஷ், போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திவேல்மாறன், ஏ.ஏ.ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலர்கள் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் காந்தி சிலை அருகில் இருந்து ஈசான்ய மைதானம் வரை நடந்து வந்து போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் ஈசான்ய மைதானத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் ஆட்சியர் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதை பொருட்கள் தடுத்தல் குறித்து தொடங்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறையை ஆட்சியர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் போதை பொருட்களை தடை செய்தல், பயன்பாட்டினை தவிர்த்தல் மற்றும் போதை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வினை ஏற்படுத்தி தரும் வகையில் நேற்று முதல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவர்கள், காவல் துறை பணியாளர்கள் உள்ளிட்டவர்களை கொண்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் போதை தடுப்பு மற்றும் மறுவாழ்விற்கான கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் எந்த இடத்தில் போதை பொருட்கள் பயன்பாடு இருந்தாலும் அதனை தெரிவிக்கவோ அல்லது போதை மருந்துகளை பயன்படுத்தி அதில் இருந்து மீள மறுவாழ்வு தேவைப்படுபவர்கள் 04175-233344, 04175-233345 மற்றும் 9345478828 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம். மேலும் போதை பழக்கத்திலிருந்து மீள மறுவாழ்வு தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியாக ஒரு சிகிச்சை பிரிவும் ஏற்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2