/* */

கலெக்டர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் தோசை ஊற்றி போராட்டம்

மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் தோசை ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

கலெக்டர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் தோசை ஊற்றி போராட்டம்
X

 தோசை ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்

மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் தோசை ஊற்றி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையில் தமிழ்நாடு நுகர்வோர் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயி நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தேசிய கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் நெல் கொள்முதல் செய்யும் முறை கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நெல் கொள்முதல் நிலையம் அமைந்தால் அதிகாரிகளை தொடர்பு கொள்வது, பண பரிவர்த்தனை ஆகியவற்றில் சிக்கல் ஏற்படும் என விவசாயிகள் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலையில் தோசை ஊற்றி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

அரசு அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்களுக்கான ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.


தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களுக்கான ஆய்வுக்குழு அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற துணை ஆட்சியா் முருகன், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலா்களுக்கு அரசின் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த பயிற்சியை அளித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளா் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அரசு அலுவலா்களுக்கு அறிவுரைகளை வழங்கிப் பேசினாா்.

பயிற்சியை நிறைவு செய்த அரசு அலுவலா்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நோமுக உதவியாளா் (பொது) வெற்றிவேல் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா். விழாவில் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பஞ்சமி நிலங்களை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்

பஞ்சமி நிலங்களை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்கிடக் கோரி திருவண்ணாமலை மாவட்ட தலித் விடுதலை இயக்கம் மகளிர் அணி சார்பில் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்று மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது,

வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் அருகில் இருந்து கோரிக்கை மனுக்களுடன் புறப்பட்ட ஊர்வலத்திற்கு மாநில மகளிர் அணி செயலாளர் நதியா தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி செயலாளர் கிச்சா முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவி சின்னதாயி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் கருப்பையா கலந்து கொண்டார். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவுவாயில் முன்பாக பஞ்சமி நிலங்களை மீட்டுத் தரக்கோரி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்கள் பஞ்சமி நிலங்களை மீட்டு தரக்கோரி மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினியிடம் மனு அளித்தனர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 March 2023 11:30 AM GMT

Related News