சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு செய்யபட்டுள்ளதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்தில் இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்தவர்கள், மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ம் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 31-ம்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 31-ம்தேதி வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 1,250 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள மற்றொரு செய்தி குறிப்பு:
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 1,250 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை திருவண்ணாமலை, வந்தவாசி, கீழ்பென்னாத்தூர், செங்கம் மற்றும் போளூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உளுந்து கொள்முதல் மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கு வருகிற டிசம்பர் 29-ம்தேதி வரை உள்ள காரிப்பருவ காலத்தில் சாகுபடி செய்யப்பட உள்ளது. இதில் உளுந்து ஒரு கிலோ ரூ.66-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 370 கிலோ மட்டுமே ஒரு விவசாயிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 1,250 டன் கொள்முதல் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் உளுந்து விற்பனைக்கு எடுத்து வரும் பொழுது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்கம், சிட்டா, அடங்கல் ஆகியவற்றின் நகல்களுடன் திருவண்ணாமலை, வந்தவாசி, கீழ்பென்னாத்தூர், செங்கம், போளூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகலாம்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.