திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி மெகா முகாம்
நாளை வழக்கம் போல் கடந்த வாரம் சிறப்பு முகாம் நடந்த ஆயிரத்து 4 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த 100% தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. அதையொட்டி மூன்றாவது கட்டமாக நாளை தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த 12ஆம் தேதி மற்றும் 19ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. தற்போது தடுப்பூசி செலுத்தி கொண்டோரின் எண்ணிக்கை 57 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்றாவது கட்டமாக தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், கொரோனா தொற்றினால் இயல்பு வாழ்க்கை பாதித்திருக்கிறது. முகக் கவசம் அணியாமல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்வதுதான் ஒரே தீர்வாக உள்ளது.
எனவே மாவட்டத்தில் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்தி முடிக்க அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். மாவட்டம் முழுவதும் நாளை வழக்கம் போல் கடந்த வாரம் சிறப்பு முகாம் நடந்த ஆயிரத்து 4 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
தடுப்பூசி செலுத்துவதற்காக தகுதி வாய்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். தடுப்பூசி சிறப்பு முகாம்களை கண்காணிக்க 184 ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முப்பத்தி இரண்டு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் வெற்றி பெற உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன் என கூறினார்.