நடப்பு பருவத்திற்கு தேவையான யூரியா ரெயில் மூலம் திருவண்ணாமலை வருகை
நடப்பு பருவத்திற்கு தேவையான யூரியா மணலி, தூத்துக்குடியில் இருந்து 2,224 டன் ரெயில் மூலம் திருவண்ணாமலைக்கு வந்தது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு தேவையான யூரியா 2 ஆயிரத்து 224.4 டன் யூரியா, 313 டன் காம்ப்ளக்ஸ், 63.85 டன் சூப்பர் பாஸ்பேட், 124 டன் அம்மோனியம் குளோரைடு ஆகிய உரங்கள் மணலி மற்றும் தூத்துக்குடியில் இருந்து ரெயில் மூலம் திருவண்ணாமலை ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.
இதை வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் உரங்கள் லாரிகள் மூலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் கூறியதாவது:-
நடப்பு பருவத்திற்கு தேவையான உரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு விற்பனை சங்கங்களில் 3 ஆயிரத்து 397 டன் யூரியா, 1470 டன் டி.ஏ.பி., 834 டன் பொட்டாஷ், 5 ஆயிரத்து 257 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 388 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரையின் படி பயிருக்கு தேவையான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் ரசீது பெற்று வாங்கி பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
உர விற்பனை நிலையங்களின் விவசாயிகள் விரும்பாத இதர இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வது தொடர்பான புகார்கள் பெறப்பட்டால் உர உரிமங்கள் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.