திருவண்ணாமலையில் கார், இரு சக்கர வாகனம் மூலம் கஞ்சா விற்ற 3 பேர் கைது
கிரிவலப்பாதையில் மறைமுகமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் எஸ்பி கார்த்திகேயனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது
HIGHLIGHTS
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மறைமுகமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் எஸ்பி கார்த்திகேயனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. மேலும் கார் மற்றும் மொபட்டில் ரகசியமாக கஞ்சா கொண்டு விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளது.
அதனால் கிரிவலப்பாதையில் குற்ற செயல்களை தடுக்க நேற்று 5 மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனங்கள் வழங்கப் பட்டது. இதைத்தொடர்ந்து கிரிவலப்பாதையில் தீவிர கண்காணிப்புப்பணிக்கு போலீஸார் நியமிக்கப்பட்டனர்.அத்துடன் இன்று கிரிவலப்பாதையில் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் திருவண்ணாமலை நகர பகுதியில் கார் மற்றும் மொபட்டில் வைத்து திருட்டுத்தனமாக கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது தலைமையிலான தனிப்படையினர் திருவண்ணாமலை நகரில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நகரில் சுற்றி வந்த கார் மற்றும் மொபட்டை தனிப்படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது காரில் கஞ்சா வைத்து விற்பனை செய்த திருவண்ணாமலை நகரை சேர்ந்த விக்னேஷ், தாமோதரன் ஆகியோரை பிடித்த அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோல் மொபட்டில் வந்த திருவண்ணாமலை அக்னி தீர்த்தம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை பிடித்து அவரிடம் 70 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், தாமோதரன், வெங்கடேசன் ஆகிய 3 பேரை கைது செய்து கார் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.