102 வயது மூதாட்டிக்கு கலெக்டர் முருகேஷ் வாழ்த்து மடல் வழங்கி கவுரவிப்பு
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் 102 வயதுடைய மூதாட்டிக்கு கலெக்டர் முருகேஷ் வாழ்த்து மடல் வழங்கி கவுரவித்தார்.
HIGHLIGHTS
உலக மூத்தோர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் 100 வயதினை அடைந்த வாக்காளர்கள் நாட்டின் ஜனநாயகத்தினை வலுப்படுத்தும் விதமாக செயல்பட்டு, நமக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகின்றனர். மேலும் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு தனது நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கும் விதமாக இந்திய தேர்தல் தலைமை ஆணையர் ராஜீவ்குமார் ஒவ்வொரு மூத்த வாக்காளர்களுக்கும் வாழ்த்து மடலை அனுப்பியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் 100 வயதினை அடைந்த வாக்காளர்களை கவுரவித்து நன்றி தெரிவித்திடும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான முருகேஷ் திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் வசிக்கும் 102 வயதுடைய சுப்பராயன் என்பவரின் மனைவி கல்யாணியின் வீட்டிற்கு நேரில் சென்று இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பான வாழ்த்து மடலை வழங்கி பொன்னாடை போர்த்தி அவரை கவுரவப்படுத்தினார். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 49 ஆயிரத்து 928 மூத்த வாக்காளர்களுக்கும் வாழ்த்து மடலை வாக்காளர் பதிவு அலுவலர்கள் தலைமையில் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு தோறும் சென்று வழங்கி வருகின்றனர் என்று கலெக்டர் தெரிவித்தார்.
வந்தவாசியில் மூத்த வாக்காளர்களை அதிகாரிகள் கௌரவித்தனர்.
வந்தவாசி காந்தி சாலையில் வசிக்கும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் அவர்களுக்கு சால்வை அறிவித்து கௌரவித்தனர்.
வந்தவாசி வட்டாட்சியர் முருகானந்தம், நகர மன்ற தலைவர் ஜலால், நகராட்சி ஆணையர் மங்கையர்கரசன் ஆகியோர் மூத்த வாக்காளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும் வந்தவாசி நகராட்சி பகுதியில் உள்ள மூத்த வாக்காளர்கள் கௌரவிக்கப்பட உள்ளதாக நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.