மாற்று இடம் கோரி எம்பி, எம்எல்ஏ கார்களை மறித்த பொது மக்கள்
நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டிய வீடுகளை காலி செய்ய உத்தரவிட்டதால் பாதிக்கப்பட்டோர் எம்பி, எம்எல்ஏ காரை மறித்து மனு அளித்தனர்.
HIGHLIGHTS

அரசின் நேரடி நெல் கொள்முதல் மையத்தை திறந்து வைத்த எம்பி., சி.என்.அண்ணாதுரை , எம்எல்ஏ சரவணன்.
அரசின் நேரடி நெல் கொள்முதல் மையத்தை திறந்து வைத்தனர்.
கலசபாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட கேட்டவரம்பாளையம் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தி.சரவணன் , ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் மையத்தை திறந்து வைத்தனர்.
விழா முடிந்ததும் அவர்கள் திரும்பிக்கொண்டிரு்தனர். அப்போது சிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்த 20 குடும்பத்தினர் எம்.பி., எம்.எல்.ஏ. காரை திடீரென மறித்து நிறுத்தி மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் ஏரிக்கரையின் ஓரம் வீடுகட்டி கடந்த 15 வருடங்களாக வாழ்ந்து வருகிறோம். தற்போது இந்த வீட்டை காலி செய்யச் சொல்லி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நாங்கள் எங்கே செல்வது எங்களுக்கு வேறு இடம் இல்லை. எனவே மாற்று இடம் வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.
அப்போது பதிலளித்துப் பேசிய எம்.எல்.ஏ. சரவணன் தமிழக அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்கள் மற்றும் நீர் பிடிப்பு இடங்கள் என அனைத்திலும் நீங்கள் வீடு கட்டிக் கொண்டால் அரசின் சார்பில் வரும் கட்டிடங்கள் எங்கு கட்டுவது மேலும் நீர்ப்பிடிப்பு பகுதியில் எப்படி தண்ணீரை சேமித்து வைப்பது என்று கேட்டார். அதன்பிறகு தாசில்தாரை போன் மூலம் தொடர்பு கொண்டு, சிறுவள்ளூரில் நீர்பிடிப்பு பகுதி இல்லாமல் வேறு இடம் இருந்தால் வீடு கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.