செங்கம் அருகே லாரி-கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
செங்கம் அருகே பால் லாரி-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வந்தாராவல்லி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன். இவரது மனைவி அவரஞ்சி. தம்பதிகளுக்கு பழனி என்ற மகன் உள்ளார். இவர்களது உறவினர்கள் தங்கவேலு, மகாலிங்கம் இவர்கள் அனைவரும் திருக்கோவிலூர் பகுதிக்கு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்த பிறகு அனைவரும் வீட்டிற்கு திரும்பினர். கார் செங்கம் அடுத்த தண்டம்பட்டு அருகே வந்து கொண்டிருந்தது.
பெங்களூருவில் இருந்து தண்டராம்பட்டுக்கு பால் ஏற்றி செல்வதற்காக லாரி தண்டம்பட்டு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சின்னப்பையன் மற்றும் அவரது மனைவி அவரஞ்சி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
படுகாயம் அடைந்த அவரது மகன் பழனி மற்றும் உறவினர்கள் தங்கவேலு மகாலிங்கம் ஆகிய 3 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மேல் செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.