காந்தி சாலையில் ‘டாஸ்மாக்’ மதுக்கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
ஆரணியில் நகரின் பிரதான சாலையில் இயங்கும் மதுக்கடையால் தள்ளாடும் மது பிரியர்களால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி சாலையில் இயங்கும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றாவிட்டால், பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் காந்தி சாலையில் டாஸ்மாக் மதுக்கடை இயங்குகிறது. ஆரணி நகரின் மையப் பகுதியில் இயங்கி வரும் இந்த டாஸ்மாக் மதுக்கடைக்கு ஆரணி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மது பிரியர்களின் வருகை அதிக அளவில் இருக்கும்.
பல்வேறு தேவைகளுக்கு ஆரணியை சுற்றியுள்ள கிராமப்புற பகுதியில் இருந்து ஆரணிக்கு வரும் மது பிரியர்கள் இந்த டாஸ்மாக் கடைக்கு செல்வது வாடிக்கையாக கொண்டுள்ளனர். இங்கு உற்சாக பானத்தை வாங்குவதற்காகவே காலையில் கடை திறப்பதற்கு முன்பாகவே வந்து கடை திறக்கும் வரை காத்திருந்து கடை திறந்த உடன் மது பானங்களை வாங்கி அங்கேயே அதாவது சாலையிலேயே மது அருந்துகின்றனர்
அப்போது மது பிரியர்கள் நிதானம் இழந்து, தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுகின்றனர். சிலர் தங்களது துணிகள் விலகி இருப்பது தெரியாமல் அங்கேயே மது மயக்கத்தில் வீழ்ந்து கிடக்கின்றனர். ‘குடி’மகன்களின் அத்து மீறலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
அதிலும் குறிப்பாக காந்தி சாலை வழியாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் மற்றும் அங்கு கடைகளுக்கு வரும் பெண்கள் நிலை பரிதாபமாக உள்ளது. மேலும் கூட்டமாக போதை உச்சத்துக்கு சென்று ரகளையில் ஈடுபடும் மது பிரியர்களால் காந்தி சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. திடீரென தள்ளாடியவாறு வாகன ஓட்டிகளின் மேல் விழுவதால் அவர்களும் கீழே விழுந்து காயங்கள் ஏற்படுகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் இந்த டாஸ்மாக் மது கடையை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் காந்தி சாலையில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் தெரிவித்துள்ளேன். அவரும் தமிழகத்தில் கொள்கை அடிப்படையில் 500 மது கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆரணி காந்தி சாலையில் உள்ள மதுக்கடையும் இடம்பெறும் .விரைவாக அகற்றப்படும் என தெரிவித்திருந்தார் .
ஆனால் 500 கடைகளில் பட்டியலில் ஆரணி காந்தி சாலையில் உள்ள மதுக்கடையின் பெயர் இடம்பெறவில்லை, மக்களும் போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மது கடையை அகற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளார்.
மேலும் இது குறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கூறுகையில்,,ஆரணி நகரில் உள்ள மது கடை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் வழிகாட்டி நெறிமுறைகளின்படி கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. பொதுமக்களில் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது மாற்றிய இடம் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் விதிமுறைகளின் படி டாஸ்மாக் மது கடை இடமாற்றம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், எனத் தெரிவித்தார்.
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், இல்லையேல் பொதுமக்களின் தொடர் போராட்டத்தை சந்திக்க நேரிடும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.