திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி
அரக்கோணத்தில் இருந்து சென்னை புளியந்தோப்பில் உள்ள இரவு பிரியாணி சாப்பிட சென்ற போது ஏற்பட்ட விபத்து குறித்து மப்பேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சோளிங்கர் ரோடு பகுதியை சேர்ந்த விஷ்ணு (26), யாமனத் (29), அஸ்வின் ராஜ் (25), பாலாஜி பிரசாந்த் (26), மதன் (26) ஆகிய 5 பேரும் அரக்கோணத்தில் இருந்து சென்னை புளியந்தோப்பில் இரவுநேர பிரியாணி கடையில் சாப்பிடுவதற்காக காரில் புறப்பட்டு சென்றனர்.
அப்போது திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அடுத்த இருளஞ்சேரி என்ற பகுதியில் கார் சென்ற போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து, எதிரில் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் பணியாற்றும் 13 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு அரக்கோணத்திற்கு சென்று கொண்டிருந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இது குறித்து தகவல் அறிந்த மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில், காரில் பயணம் செய்த அஸ்வின்ராஜ், பாலாஜி பிரசாந்த், மதன் என்ற 3 இளைஞர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் பயணம் செய்த விஷ்ணு பலத்த காயங்களுடன் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கும், யாமனத் என்ற இளைஞர் மிகவும் ஆபத்தான நிலையில் சென்னை அரசு மருத்துவ மனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனையடுத்து விபத்தில் உயிர் இழந்த 3 பேரின் சடலங்களை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அரக்கோணத்தில் இருந்து சென்னை புளியந்தோப்பில் உள்ள பிரியாணி கடையில் சாப்பிடுவதற்காக காரில் சென்றபோது இந்த விபத்து நேரிட்டதாக தெரிய வந்துள்ளது. தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேனில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர் . இரவு பிரியாணி சாப்பிடுவதற்காக காரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.