சோழவரம் அருகே காரில் வந்து ஆடுகளை திருடிய பெண் உள்பட மூவர் கைது
சோழவரம் அருகே காரில் வந்து ஆடுகளை திருடிய பெண் உள்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
சோழவரம் அருகே காரில் வந்து லாவகமாக ஆடுகளை திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதியை சேர்ந்த உதயகுமார் என்ற இளைஞர் கடந்த மாதம் 24ஆம் தேதி தமக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மாலையில் தமது 3ஆடுகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து ஊராட்சி சார்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் காரில் வந்த 1பெண் உட்பட 3பேர் ஆடுகளை கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து உதயகுமார் சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு சோழவரம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் ஆடு திருடிய மூவரை கைது செய்தனர். திருமழிசையை சேர்ந்த லட்சுமி, அஜித்குமார், மதுரவாயலை சேர்ந்த சரத்குமார் ஆகிய மூவரை கைது செய்தனர்.
தொடர்ந்து இவர்கள் பல்வேறு இடங்களில் இதே போல காரில் சென்று ஆடுகளை திருடி வந்தது தெரிய வந்தது. எனவே சுற்று வட்டார கிராமங்களில் யார் வீட்டில் எல்லாம் ஆடுகள் காணாமல் போனது எனவும், இது தொடர்வாக காவல் நிலையங்களில் புகார் மனுக்கள் எதுவும் கொடுக்கப்பட்டுள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஆடு திருடிய வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.