திருவள்ளூர் நகராட்சி புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி துவக்கம்
திருவள்ளூர் நகராட்சி புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி பூமி பூஜை நடத்தி துவக்கி வைக்கப்பட்டது.
HIGHLIGHTS
முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான திருவள்ளூர் எல்லைக்குட்பட்ட வேடங்கி நல்லூர் பகுதியில் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய பேருந்து நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் மற்றும் ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழா பணிகளை தொடங்கி வைத்தனர்.
திருவள்ளூர் நகராட்சியானது முதல் நிலை நகராட்சியில் இருந்து தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது நிலையில் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகராட்சியாகவும் , திருவள்ளூர் மாவட்டத்தின் தலைநகரமாக இருப்பதால் இங்கு புதிய பேருந்து நிலையம் அமைத்திட வேண்டும் என தமிழக அரசிடம் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
மேலும் முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதியாகவும் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பரீசீலனை செய்யப்பட்டு பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைத்திட ரூ. 33 கோடி மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார். அதனை தொடர்ந்து 2.02.5 ஹெக்டேர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக பணிகளை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா, நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன். மற்றும் அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.