கட்டிடம் இல்லாததால் இ சேவை மைய கட்டிடத்தில் இயங்கும் ஊராட்சி நிர்வாகம்
திருவள்ளூர் அருகே கட்டிடம் இல்லாததால் இ சேவை மைய கட்டிடத்தில் ஊராட்சி நிர்வாகம் இயங்கவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த ஏனம்பாக்கம் ஊராட்சியில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள் என சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் கட்டுவதற்கு ஊராட்சி அலுவலகம் சென்று கட்ட வேண்டும் மேலும் தாங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை குறித்தும் ஊராட்சி அலுவலகத்தில் பிரதிநிதிகளிடம் கூறுவார்கள் .
இந்த நிலையில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிறது. இதனால் இந்த கட்டிடம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பழுதடைந்து கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து மழை காலங்களில் மழை நீர் கசிந்து அலுவலகத்தில் உள்ளே வருகிறது .மேலும் ஊராட்சிக்கு சொந்தமான முக்கிய கோப்புகள் நனைந்தது கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பழுதடைந்த கட்டடத்தை கைவிட்டு தற்போது நிர்வாகம் ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள இ சேவை மைய கட்டிடத்தில் செயல்பட்டு இயங்கி வருகிறது. ஒரே கட்டடத்தில் இரண்டு நிர்வாகம் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த பழைய ஊராட்சி கட்டடத்தை சுற்றி அடர்ந்த முட்புதர்கள் வளர்ந்தும் அந்தக் கட்டிடத்தில்.ஆடுகள்,மாடுகள், என கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கட்டி வருகின்றனர். இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெற்றுவதாகவும். எனவே பழுதடைந்த ஊராட்சி பழைய கட்டடத்தை அகற்றி விட்டு புதிய கட்டடத்தை கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.