திருவள்ளூர் மாவட்டத்தின் ஆட்சியராக பிரபு சங்கர் பதவியேற்பு
திருவள்ளூர் மாவட்டத்தின் 23.வது மாவட்ட ஆட்சியராக பிரபு ஷங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
HIGHLIGHTS
ஏழை எளிய மக்களின் தேவைகளை கண்டறிந்து அதை உடனுக்குடன் நிறைவேற்றுவதுடன் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க அரசு நல திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்று சேர பாடுபடுவேன் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கூறினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராக பணி மாறுதலில் சென்றதை அடுத்து, இதற்கு முன்பு கரூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த தா.பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்டத்தின் 23.வது மாவட்ட ஆட்சியராக நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் கோப்புகளில் கையெழுத்திட்டப்பின்பு செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறும்போது, இதற்கு முன்பிருந்த ஆல்பி ஜான் வர்கிஸ் விட்டுச் சென்ற பணிகளை முழுமையாக நிறைவேற்றுவேன். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரம் மேம்படவும், ஏழை எளிய மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றுவேன் மேலும் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்று சேர பாடுபடுவேன் என்றார்.