திருவள்ளூர் அருகே திருவல்லங்காட்டில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு
திருவள்ளூர் அருகே திருவல்லங்காட்டில் புதிய புறக்காவல் நிலையத்தை போலீஸ் டி.எஸ்.பி.திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் திருவல்லங்காடு அடுத்த சின்னம்மா பேட்டை பகுதியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்ட புதிய புறக் காவல் நிலையத்தை போலீஸ் டி.எஸ்.பி. விக்னேஷ் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவல்லங்காடு அடுத்த சின்னம்மா பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே இங்கு ஒரு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்ள வலியுறுத்தி வந்தனர். மக்களின் இந்த கோரிக்கையை ஏற்ற ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா நாகராஜன் டி.எஸ்.பி. விக்னேஷிடம் தெரிவித்தார். பின்னர் அங்கு புற காவல் நிலையம் அமைத்தால் குற்ற சம்பவங்களை தடுக்கலாம் என்று கூறியதின் அடிப்படையில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா நாகராஜன் ஏற்பாட்டில் புதியதாக புறக் காவல் நிலையம் சி.சி.டி.வி. கேமரா அமைத்து அதற்கு சின்னம்மா பேட்டை புற காவல் நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டி.எஸ்.பி. விக்னேஷ் புதிய புறக் காவல் நிலையத்தை விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த புறக்காவல் நிலையத்தில் தினந்தோறும் நான்கு காவலர்களை பணியில் அமர்த்தப்படுவார்கள். இதனால் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம் என்று டிஎஸ்பி விக்னேஷ் தெரிவித்தார்.
இந்த புறக்காவல் நிலையத்தின் மூலம் சுற்று வட்டார பகுதிகளில் இனி மக்கள் திருட்டு பயம் இன்றி வாழலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. புறக்காவல் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்த ஊராட்சி தலைவர் சரண்யா நாகராஜனுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.