திருத்தணியில் விரைவில் கைத்தறி பட்டு பூங்கா: அமைச்சர் காந்தி
திருத்தணியில் கைத்தறி பட்டு பூங்கா விரைவில் அமைக்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 1886 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழாவானது திருவள்ளூர் அடுத்து பட்டரைப் பெருமந்தூரில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் கைத்தறி துறை அமைச்சர் காந்தி பங்கேற்று 37 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான பரிசு தொகை பாராட்டுச்சான்றிதழ்களை வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழங்கினார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், விருதுநகரில் பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மெகா ஜவுளி பூங்கா அமைப்பிற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், திருத்தணியில் நெசவாளர்கள் அதிகம் நிறைந்த பகுதியாக இருந்து வருவதால் திருத்தணி மையமாகக் கொண்டு கைத்தறி பூங்கா கொண்டுவர இடம் தேர்வு செய்து வருவதாகவும, விரைவில் நெசவாளர்கள் பயனடையும் வகையில் கைத்தறி பூங்கா திருத்தணியில் அமையும் எனவும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் எம் பி ஜெயக்குமார் மாவட்ட ஆட்சியர் ஆல் பிஜான் வர்கீஸ் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி. ராஜேந்திரன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கோவிந்தராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி. உமாமகேஸ்வரி, பள்ளி மேலாளர் கயல்விழி மற்றும் மாவட்ட விளையாட்டு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.