தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 5.பேர் கைது!
புழல் சுற்றுவட்டார பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 5. பேரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
புழல் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள், 3 செல்போன்கள் 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை சுற்றுவட்டாரங்களில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அடிக்கடி திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்க காவல்துறையினரும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதேநேரம் திருட்டு குற்றங்களில் ஈடுபடுபவர்களும் அதிக அளவில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புழல் அருகே அடிக்கடி திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்த சிலரை பொறிவைத்து பிடித்துள்ளனர் காவல்துறையினர்.
திருவள்ளூர் மாவட்டம், புழல் சுற்றுவட்டார இடங்களில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, இருசக்கர வாகனங்களில் செல்வோரை கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறிப்பு என அவ்வப்போது வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதனால் அந்த பகுதியில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் செல்வதற்கே பொதுமக்கள் அஞ்சும் நிலைய ஏற்பட்டது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினருக்கும் பல்வேறு புகார்கள் சென்று கொண்டே இருந்தன.
இதனை தொடர்ந்து புழல் காவல்துறையினர் அந்த பகுதியில் பல காவல்துறையினரை நேர அடிப்படையில் பணியமர்த்தி தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் காவல்துறைக்கு ஒரு திருட்டுக் கூட்டம் பற்றிய ரகசிய தகவல் கிடைத்தது. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிலர் கொடுங்கையூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. இதனால் அவர்களை பொறிவைத்து பிடிக்க காவல்துறையினர் திட்டமிட்டனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு அடுத்த திருட்டு குறித்து திட்டம் போட்டுக் கொண்டிருந்த ஐந்து பேரை அதிரடியாக கைது செய்தனர். அங்கிருந்து காவல்துறை வாகனம் மூலம் புழல் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினரின் விசாரணையில் மூர்த்தி (21), தனுஷ்குமார் (19), நாகராஜ் (19), அழகர்சாமி(20), ஜெயசூர்யா (19 ) எனும் ஐந்து பேர்தான் இவர்கள் என தெரியவந்தது. இவர்கள் அந்த பகுதியில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள், 3 செல்போன்கள், 2 கத்திகளையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.