பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
சோழவரம் அருகே சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மற்றொரு லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
HIGHLIGHTS
ஆந்திராவில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஜனப்பன்சத்திரம் மேம்பாலத்தில் இந்த லாரி அதிகாலை நேரத்தில் பழுதாகி நின்றுது.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த மற்றொரு லாரி, சாலையில் பழுதாகி நின்ற லாரியின் மீது பலமாக மோதியது. இதில் இரும்பு கம்பிகள் முன்னால் வந்து மோதியதில் லாரியின் ஓட்டுநர் கேபின் பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் ஒட்டியபடி அப்பளம் போல நசுங்கி இடிபாடுகளில் ஓட்டுநர் உள்ளிட்டோர் சிக்கி அலறி துடித்தனர்.
விபத்தை கண்ட பிற வாகன ஓட்டுநர்கள் உதவியுடன் லாரியில் பயணித்த கார்த்திக் யாதவ் பலத்த காயங்களுடன் லாரியில் இருந்து உயிருடன் வெளியேறினார். இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த லாரி மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் செங்குன்றம் மற்றும் அம்பத்தூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2கிரேன்கள் உதவியுடன் விபத்தில் சிக்கி அப்பளம் போல் நசுங்கி இருந்த லாரியை பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிரேன் மற்றும் கட்டிங் இயந்திரங்கள் லாரி அப்புறப்படுத்தப்பட்டு உடல் நசுங்கி பலியான ஓட்டுநர் சோழம் யாதவ் 22, மேற்பார்வையாளர் இம்ரான் 23 ஆகிய இருவரது சடலங்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். விபத்தில் காயமடைந்த கார்த்திக் யாதவை ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தொடர்ந்து உயிரிழந்த இருவரது சடலங்களை கைப்பற்றிய செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாலை நேரத்தில் லாரிகள் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் காரணமாக சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.