மிரட்டும் தொனியில் பேசும் ஊராட்சி தலைவர் மீது ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் மனு..!
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்களை மிரட்டும் தொனியில் பேசும் ஊராட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட விஷ்ணுவாக்கம் பேராத்தூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்க வேண்டும் என்றும் ஊராட்சி மன்றத் தலைவர் சொன்னால் தான் உங்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் அடியாட்களை வைத்துக்கொண்டு மிரட்டுவதாக ஊராட்சி தலைவர் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நூற்றுக்கு மேற்பட்ட விஷ்ணுவாக்கம் கிராமத்தினர் கூட்டமாக வந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்த மனுவில், விஷ்ணுவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கீதா மற்றும் அவருடைய கணவன் மோகன் நாயுடு ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஷ்ணுவாக்கம் ஊராட்சியில் உள்ள தனியார் நிறுவனங்களில் நான் சொன்னால்தான் இந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் மிரட்டும் தொனியில் பேசி மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், அது மட்டும் இல்லாமல் அடியாட்களை வைத்து அச்சுறுத்துவதாகவும், பேராத்தூர் கிராம மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்து இருந்தனர். இதையடுத்து ஊராட்சி தலைவர்குற்றச்சாட்டை கூறி பொதுமக்கள் மனு அளித்ததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.