ஊராட்சி மன்றக் கட்டிடம் கட்டித் தர கிராம மக்கள் கோரிக்கை
பூந்தமல்லி அருகே, சேத்துப்பாக்கம் ஊராட்சி மன்றக் கட்டிடம் பழுதடைந்ததால், நூலகக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி எல்லாபுரம் ஒன்றியம் தாமரைப்பாக்கம் அருகே சேத்துப்பாக்கம் ஊராட்சியில், 2.500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது இந்த பள்ளி வளாகத்தில் பழைய ஊராட்சி கட்டிடம் 1998ம் ஆண்டு ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் தாங்கள் பகுதியில் உள்ள குறைகளை எடுத்துக் கூறவும் வீட்டு வரி குடி தண்ணீர் வரி சொத்து வரி உள்ளிட்டவை செலுத்த ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து செல்வார்கள்.
இந்த நிலையில் தற்போது இக்கட்டிடம் கட்டி, 22 ஆண்டுகள் ஆகிய நிலையில், தற்போது கட்டிடம் மிகவும் பழுதடைந்து மேற்கூரை சிமெண்ட் பூசுகல் பெயர்ந்து மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நின்று கட்டிடத்திற்குள் கசிந்து ஊராட்சிக்கு சொந்தமான முக்கியமான கோப்புகள் நனையும் அவல நிலை ஏற்பட்டது.
இதனால் 3 வருட காலமாக அருகே உள்ள நூலக கட்டிடத்தில் ஊராட்சி நிர்வாகம் இயங்கி வருகிறது. மேலும் கட்டிடத்தை சுற்றி அடர்ந்த முட்பதர்களும் வளர்ந்து விஷ பூச்சிகளுக்கு இருப்பிடமாக மாறி உள்ளது. மேலும், இப்பகுதியில் பொதுமக்களும் மற்றும் படித்த இளைஞர்களும் ஊராட்சி மன்ற கட்டிடம் இல்லாத காரணத்தினால், ஊராட்சி நிர்வாகம் தற்போது நூலக கட்டிடத்தில் இயங்கி வருவதால், நூலகத்திற்கு சென்று நாளிதழ்களும் அறிவு சம்பந்தமான புத்தகங்களை படித்து தெரிந்து கொள்ள முடியவில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் அலுவலகத்திலும் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.. எனவே, இந்த பழைய ஊராட்சி கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டடத்தை கட்டித் தந்து நூலக கட்டிடத்தை சரி செய்து தர வேண்டுமென அப்பகுதி மக்களும், படித்த இளைஞர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.