/* */

தமிழகத்தில் 46ஆயிரம் கொரோனா சிகிச்சை படுக்கைகள் காலி: அமைச்சர் மா.சுப்பிரமண்யம்

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 46ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் 46ஆயிரம் கொரோனா சிகிச்சை படுக்கைகள் காலி: அமைச்சர் மா.சுப்பிரமண்யம்
X

மதுரவாயல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியபோது.

சென்னையை அடுத்த மதுரவாயலில் திமுக சார்பில் முன்னாள் கவுன்சிலர் ரமேஷ்காந்த் ஏற்பாட்டில் 1000 பேருக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கலந்துக் கொண்டு ஒரு மாதத்திற்கு தேவையான 10 கிலோ அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்டவற்றை மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் என 2000 பேருக்கு வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்று திறன் உள்ளது என்பதை அறிந்து மாற்றுத்திறனாளிகள் என பெயர் வைத்தவர் கலைஞர் கருணாநிதி. கடந்த திமுக ஆட்சியில் தான் துப்புரவு பணியாளர்களுக்கு தூய்மை பணியாளர்கள் என பெயரிடப்பட்டது.

கொரோனா தொற்றின் அளவு 20ஆயிரத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்து அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியது. தற்போது 18 ஆயிரம் என குறைந்து மன அமைதியை தந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 46,072 படுக்கைகள் காலியாக உள்ளது. இது கொரோனா நம்மைவிட்டு விலகி கொண்டு இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

விரைவில் தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என்றார். சென்னையில் 7 ஆயிரத்தில் இருந்த தொற்று தற்போது 1437 என இறங்கியுள்ளது.

தமிழகத்தில் 18வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்பது இலக்கு. தடுப்பூசிக்காக தமிழ்நாடு அரசு 100 கோடி ரூபாயை ஒன்றிய அரசிற்கு வழங்கியுள்ளது. தடுப்பூசி இல்லை என்பது உண்மை தான். இன்னும் ஒரிரு நாட்களில் 2வது டோஸ் தடுப்பூசி வந்துவிடும். பின்னர் வழக்கம் போல் தடுப்பூசி மையங்கள் மூலம் தடுப்பூசி போடப்படும் என்றார்.

Updated On: 9 Jun 2021 4:16 AM GMT

Related News