அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் கிராம பள்ளி தத்தெடுப்பு
கும்மிடிப்பூண்டி அடுத்த தோக்கம்மூர் ஊராட்சி எல்.ஆர்.மேடு அரசு நடுநிலைப்பள்ளி தத்தெடுக்கப்பட்டு 1982ஆம் ஆண்டு மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல்நிலைப்பள்ளியில் 1982ஆம் 10ஆம் வகுப்பு படித்த 50 முன்னாள் மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளியில் பல்வேறு மாணவர் நலனிற்கான பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் ஒருவரான லட்சுமி தற்போது தோக்கம்மூர் ஊராட்சி எல்.ஆர்.மேடு அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக உள்ளார்.
தங்களுடன் படித்த முன்னாள் மாணவியான எல்.ஆர்.மேடு தலைமை ஆசிரியர் லட்சுமி பணிபுரியும் பள்ளி குறித்து கேள்விப்பட்ட, மேற்கண்ட முன்னாள் மாணவர் சங்கத்தினர், இந்த பள்ளியை தத்தெடுத்து பள்ளுக்கு தேவையான நலத்திட்ட பணிகளை செய்ய முன்வந்தனர்.
தொடர்ந்து இவர்கள் பள்ளி மாணவர்களுக்கு இரும்பு டேபிள் மற்றும் பெஞ்ச் ஆகியவற்றை ஏற்பாடு செய்தனர். இதனை பள்ளிக்கு ஒப்படைக்கும் நிகழ்வு பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.லட்சுமி தலைமையிலும், வட்டார கல்வி அலுவலர் பி.ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தோக்கம்மூர் ஊராட்சி முன்னாள் தலைவர் து.மணி பங்கேற்று மேற்கண்ட முன்னாள் மாணவர் அமைப்பினரிடம் இருந்து பள்ளிக்கு தேவையான டேபிள், பெஞ்சுகளை பெறறுக் கொண்டார்.
இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர் அமைப்பினர் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி. பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தனர்.