கும்மிடிப்பூண்டி அருகே பாம்பு கடித்து இளம்பெண் பலி
கும்மிடிப்பூண்டி அருகே பாம்பு கடித்து இளம்பெண் பலியானது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சோம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் விவசாயி. இவருக்கு மனைவி, 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள உள்ளனர். கடந்த மாதம் 28. தேதி இரவு ரவிச்சந்திரன் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது மூத்த மகள் வைதேகி (23) வெளியே உள்ள கழிவறைக்கு சென்று வீட்டிற்குள் வந்த போது தன்னை ஏதோ ஒன்று கடித்தது போல் உணர்ந்து, தந்தை ரவிச்சந்திரனிடம் கூறியுள்ளார். உடனடியாக ரவிச்சந்திரன் டார்ச்லைட் எடுத்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தபோது, அங்கு 4 அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு இருந்துள்ளது.
உடனே ரவிச்சந்திரன், தனது மகள் வைதேகியை சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி வைதேகி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.