குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
கும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் ஆழ்துளை கிணறு அமைத்து தரக்கோரி கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலக்கழனி கிராமத்தில் சுமார் 3500.க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் வசிக்கும் மக்கள் குடிநீர் தேவைக்காக ஏற்கனவே கிராமத்தில் 8.ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் ஊராட்சிக்கு பல்வேறு பகுதிகளில் குழாய்கள் மூலம் நாள்தோறும் காலை மாலை என இரு வேளைகளில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மக்கள் தொகை அதிகரித்து வரும் காரணத்தினால் இப்பகுதியில் குடி தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் கூடுதல் ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடமும். கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரிடமும் இது குறித்து பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், ஆண்கள் என அனைவரும் ஒன்று கூடி காலி குடங்களை கையில் ஏந்தி தண்ணீர் கேட்டு கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்காத பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஒன்றிய குழு பெருந்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் வந்து தங்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்துத் தருவோம் என்று உறுதி அளித்ததால் மட்டுமே நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பகுதிக்கு நிச்சயமாக ஆழ்துளை கிணறு அமைத்து தருவோம் என்ற உறுதி அளித்ததின் பேரில் அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.