இரும்பு கேட் விழுந்து சிறுவன் இறந்த சம்பவத்தில் விடுதி குத்தகைதாரர் கைது
இரும்பு கேட் விழுந்து சிறுவன் இறந்த சம்பவத்தில் விடுதி குத்தகைதாரரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வந்த இடத்தில் தங்கும் விடுதியில் இரும்பு கேட் சரிந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் குத்தகைதாரரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதி பவானி அம்மன் கோவிக்கு நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்னை அயனாவரம் பெரியார் பள்ளம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் குடும்பத்தினருடன் வந்திருந்தார். மனைவி துர்கா மகன்கள் சிலம்பரசன்(13) நித்திஷ் (11) என்கின்ற இரண்டு மகன்களுடன் பெரியபாளையம் அரசு மேல்நிலை பள்ளி பின்புறம் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.
அப்போது விடுதியின் சுற்றுச்சுவர் ஓரத்தில் சாய்த்து வைத்திருந்த ராட்சச இரும்பு கேட் சரிந்து விழுந்ததில் அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் நித்திஷ் சிக்கிக்கொண்டான். இதனை கவனித்த பெற்றோர்கள் அலறி அடித்துக் கொண்டு நித்திஷை மீட்டு பெரியபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டான் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து மெத்தனமாக செயல்பட்ட தனியார் விடுதி மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரியபாளையம் காவல் நிலையத்தில் நித்திஷின் பெற்றோர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் விடுதி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கட்டிடத்தை அஜாக்கிரதையாக பராமரித்தல், அஜாக்கிரதையால் உயிரிழப்பை ஏற்படுத்துதல் என 2பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விடுதியின் குத்தகைதாரர் ராஜேந்திரனை கைது செய்தனர். தொடர்ந்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தனியார் விடுதியின் குத்தகைதாரர் ராஜேந்திரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.