தரைப்பாலங்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்: ஆபத்தை உணராத சிறுவர்கள்
Flood News in Tamil -திருவள்ளூர் அருகே சிறுவர்கள் தரைப்பாலங்களில் பெருக்கெடுத்து ஓடும் நீரின் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து விளையாடுகிறார்கள்.
HIGHLIGHTS
Flood News in Tamil -ஏடூர் அருகே சானாபுத்தூர் ஏரியின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் மா நல்லூர் ஏரியிலிருந்து வரும் தண்ணீரால் தரைப்பாலும் மூழ்கியதால் சானா புத்தூர், அல்லிகுளம், சூரப்பூண்டி, மாதர் பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 12 கிலோ மீட்டர் தூரம் சுற்றி மாதர் பாக்கம் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் ஏடூர் அருகே உள்ள சானாபுத்தூர் ஏரியின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் இடுப்பளவிற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக மாநல்லூர் ஏரிலிருந்து வரும் தண்ணீர் சானாபுத்தூர் ஏரி வழியாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சானா புத்தூர் ஏரிக்கு குறுக்கே உள்ள தரைப்பாலம் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியுள்ளதால் சானாபுத்தூர், அல்லிகுளம், சூரப்பூண்டி மாதர் பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி மாநல்லூர் வழியாக சுமார் 12 கிலோமீட்டர் சுற்றி மாதர் பாக்கம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தரைப் பாலத்தில் செல்லும் தண்ணீரில் சிறியவர்கள் செல்பி எடுத்தும், குளித்தும் ஆபத்தை உணராமல் விளையாடி வருகின்றனர். உடனடியாக அசம்பாவிதம் ஏற்படும் முன் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். இதேபோல் பெரியபாளையம் அடுத்த புதுப்பாளையம்,மங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தரைப்பாலங்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து வாழ்வதால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள பெருமாள் நகர் விவசாயிகள்,பள்ளி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள் ஆகியோர் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது.
இது தொடர்பாக இப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில் சுமார் 50 ஆண்டு காலமாக ஆரணி ஆற்றின் குறுக்கே புதுப்பாளையம் பகுதியில் உள்ள தரை பாளையத்தை அகற்றிவிட்டு மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் கோரிக்கை மனுகொடுக்கப்பட்டது.
அவர்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றார்களே தவிர நடவடிக்கை எடுக்கவில்லை. சிலர் அந்த நேரத்திற்கு மட்டும் வந்து ஆய்வு செய்து பொய்யான வாக்குறுதிகளை கூறிவிட்டு செல்கின்றார்களே தவிர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தங்கள் பகுதியில் விளைவிக்கும் காய்கனிகள், கீரை வகைகள் உள்ளிட்டவை அறுவடை செய்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்று வருவதால் வியாபாரம் செய்ய முடியாமல் பொருட்களை திரும்ப கொண்டு வரும் நிலை உள்ளது. ஓரிரு நாட்கள் பயன்படுத்தக்கூடிய காய்கறிகள் உள்ளிட்டவற்றை அன்றாடம் விற்கவில்லை என்றால் தங்களுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுகிறது.
எனவே இனியாவது ஆற்றில் தண்ணீர் நின்றவுடன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆற்றில் மேம்பாலம் தர வேண்டும் என கூறினார்கள்.
சமீபத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் விரைவில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் புதுப்பாளையம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் மேம்பாலம் கட்டித் தரப்படும் என உறுதி அளித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2