/* */

சாலையில், நாற்று நடும் போராட்டம் நடத்திய விவசாயிகள்

சாலையை சீரமைக்க வலியுறுத்தி, நாற்று நடும் போராட்டத்தில் விவசாய சங்கத்தினர் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சாலையில், நாற்று நடும்  போராட்டம் நடத்திய விவசாயிகள்
X

கும்முடிப்பூண்டி பகுதியில், நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், மங்காவரம் முதல் அப்பாவரம் வரை செல்லும் ஒன்றிய சாலையை சீரமைக்க வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில், சாலையில் நாற்று நடும் போராட்டம் நடந்தது. மங்காவரம் முதல் அப்பாவரம் வரை 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாலை மிகவும் மோசமாகவும், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில், மழைநீர் தேங்கியும் நிற்கிறது.

இதனால் இந்த சாலையில் செல்வோர், அடிக்கடி வாகன விபத்துகளை சந்திக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில், இந்த சாலையை சீரமைக்க டெண்டர் விடப்பட்டு, இதுவரை எவ்வித பணிகளும் நடக்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை போராடியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் இப்பகுதியில் வாழும் விவசாய மக்கள், அதிக அளவில் நெற்பயிர், பூக்கள், காய்கறிகள் என பயிரிட்டு அவற்றை அறுவடை செய்து, விவசாயிகள் தங்கள் இரு சக்கர வாகனங்களை கூட இயக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், தற்போது மழைக்காலம் என்பதால் அதில் சேறும் சகதியாகவும் மாறியதால், அந்த வழித்தடத்தில் இயங்கி வந்த அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதித்துள்ளனர். பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மங்காவரத்தில் சாலையில் நாற்று நடும் போராட்டத்தை நடத்தினர். வாகன பயணத்துக்கு தகுதியற்ற ரோடாக காட்சியளிப்பதால், அங்கு நாற்றுகளை நட்டு தங்களது எதிர்ப்பை நுாதன முறையில், விவசாயிகள் வெளிப்படுத்தினர்.

இந்தப் போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க வட்ட நிர்வாகிகள் ஜோதி, செல்வம், மனோகரன், குணசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் லோகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தொடர்ந்து ஆண்களும், பெண்களும் சேர்ந்து சாலையில் நாற்று நட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து, கண்டன முழக்கம் எழுப்பினர்.

பின்னர் அங்கு விரைந்து விரைந்த கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் ருத்ரமூர்த்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பழைய டெண்டர் ரத்து செய்யப்பட்டு விட்ட நிலையில், சாலையை மேம்படுத்த புதிதாக 1400 மீட்டருக்கு 72 லட்சம் ரூபாயில் திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று விரைவில் புதிய சாலை பணிகளை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.

ஒரு மாதத்திற்குள் சாலை பணிகளை ஆரம்பிக்காவிட்டால், வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 9 Nov 2022 6:32 AM GMT

Related News