கேஸ் குடோன் கட்ட எதிர்ப்பு; டிராக்டர்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
மங்காவரம், ராஜபாளையம் கிராமத்தில் கேஸ் குடோன் கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டிராக்டர்களை சிறைபிடித்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
கும்மிடிப்பூண்டி அருகே, ராஜாபாளையம் கிராமத்தில் தனியார் கேஸ் குடோன் கட்ட நடக்கும் முன் ஏற்பாடுகளை கண்டித்து கிராம மக்கள் கட்டுமான பொருட்கள் ஏற்றி வந்த டிராக்டர்களை, சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே மங்காவரம் ஊராட்சி ராஜபாளையம் கிராமத்தில் தனியார் கேஸ் குடோன் அமைப்பது குறித்து கடந்த ஆறு மாதங்களாக இருதரப்பினர் இடையே பிரச்சனைகள் இருந்து வருகிறது இது தொடர்பாக அரசு அதிகாரிகள் பலமுறை சமாதான கூட்டம் நடைபெற்றது ஆனால் ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடியிருப்பு பகுதியில் அருகே, தனியார் கேஸ் குடோன் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் அதிகாரிகளும் கேஸ் குடோன் அமைக்க கூடாது என, உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில், மீண்டும் கேஸ் குடோன் அமைக்க கட்டுமான பொருட்கள் ஏற்றி வந்த டிராக்டர்களை சிறைபிடித்து முற்றுகையிட்ட கிராம மக்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கேஸ் குடோன் கட்டக்கூடாது என, எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதுகுறித்து, மங்காவரம் ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை்தொடர்ந்து போராட்டம் நடந்த இடத்திற்கு வந்த மங்காவரம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல் தலைமையிலான ஊராட்சி மன்ற நிர்வாகிகள், முற்றுகையில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம், சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து கட்டுமான பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டதால், போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.