ஊத்துக்கோட்டை அருகே மூடப்பட்ட காவல் உதவி மையத்தை திறக்க கோரிக்கை
ஊத்துக்கோட்டை அருகே மூடப்பட்ட காவல் உதவி மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
HIGHLIGHTS
ஊத்துக்கோட்டை அருகே லட்சுபாலவாக்கம் பஜார் தெருவில் கண்காணிப்பு கேமராக்கள் வசதியுடன் காவல் உதவி மையத்தை அமைச்சர் ஆவடி நாசர் திறந்து வைத்த ஒரு மாதத்திலே பூட்டப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட லட்சுபாலவாக்கம் பஜார் தெருவில் மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட புறக்காவல் நிலைய காவல் உதவி மையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. வணிகர் சங்க பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் சௌந்தரராஜன்,தமிழ்நாடு அடகு மற்றும் நகை வியாபாரிகள் சங்க தலைவர் சுவாமி தேஜானந்த் ஆகியோர் தலைமையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு. நாசர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உதவி காவல் மையத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கை ஏற்றி வைத்து சி.சி.டி.வி. கேமராக்களையும் துவக்கி வைத்தனர்.
இதில் ஊத்துக்கோட்டை ஒன்றிய டி.எஸ்.பி. என்.சி. சாரதி, ஊத்துக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் உடன் இருந்தனர். ஒரு மாத காலம் மட்டும் இயங்கிய உதவி காவல் மையம் கடந்த மூன்று மாதங்களாக பூட்டி கிடக்கிறது. இது குறித்து அந்தபகுதி மக்கள் தெரிவிக்கையில் குற்ற சம்பவங்களை தடுக்க இந்த உதவி காவல் மையமானதை கொண்டுவரப்பட்டு லச்சுவாக்கம் பஜார் சந்திப்பு சாலை முக்கிய தெருக்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது .இதனால் குற்ற சம்பவங்களும் நடைபெறாத வந்தன.
ஒரு மாத காலம் மட்டும் இயங்கி வந்த இந்த உதவி காவல் மையம் மூன்று மாத காலமாக திறக்கப்படாமலும் பூட்டி கிடக்கிறது. எனவே இந்த மூடப்பட்ட உதவி காவல் மையத்தை திறந்து வைத்து இப்பகுதியில் எப்போதும் காவலர்கள் பணியில் இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லச்சுவாக்கம் கிராம மக்கள் மற்றும் அப்பகுதி வியாபாரிகள் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.