தேசிய கருத்தரங்கில் பங்கேற்க மலை கிராம பெண்கள் தேர்வு
மத்திய அரசால் நடத்தப்படும் கருத்தரங்கில் தமிழக பிரதிநிதிகளாக பங்கேற்க, உடுமலை கரட்டுப்பதியை சேர்ந்த பெண்கள் தேர்வாகியுள்ளனர்.
HIGHLIGHTS
மத்திய அரசின், பழங்குடியினர் நலத்துறை சார்பில், 'ஆதி மகோத்சவம்' என்ற விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவை யொட்டி நடத்தப்படும் கருத்தரங்கில், நாடு முழுக்க உள்ள, பழங்குடியின மக்களின் பிரதிநிதிகள் வரவழைக்கப்பட்டு, அவர்களின் வாழ்வியல், கலாசாரம், பொருளாதார மேம்பாடு, கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படும்.
நடப்பாண்டு கருத்தரங்கு, புதுடில்லியில், இன்று (25ம் தேதி) துவங் குகிறது. இக்கருத்தரங்கில், தமிழகத்தின் பிரதிநிதிகளாக பங்கேற்க, உடுமலை கரட்டுப்பதி மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த மகுடேஸ்வரி, பிரியா ஆகிய பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், தென்னை நாரில், கைவினைப்பொருட்கள், தயாரிக்க, உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் மூலம் பயிற்சி பெற்று, பிற மலைவாழ் கிராம பெண்களுக்கும் பயிற்சியளித்து வருகின்றனர்.
மலைவாழ் மக்கள் மேம்பாட்டு ஆணையம் மூலம், பிற மாநிலத்தை சேர்ந்த பழங்குடியினருக்கு, கைவினைப் பொருட்கள் தயாரிக்க, இரு நாள் பயிற்சியளிக்க உள்ளனர். தேசிய அளவிலான கருத்தரங்கில், தங்கள் கிராம பெண்கள் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது என, கரட்டுப்பதி மலைவாழ் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.